![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஹெட்ஃபோன் பயன்படுத்துபவரா நீங்கள்… காது கேட்காமல் போகும் அபாயம்! தவிர்ப்பது எப்படி?
உரத்த ஒலி கேட்கும்போது, காது செல்கள் வளைந்துவிடும். உரத்த ஒலிகளைக் கேட்ட பிறகு போதுமான நேரம் ஓய்வு வழங்கப்பட்டால், இந்த செல்கள் மீட்க முடியும், இல்லையெனில், அது நிரந்தர சேதத்தை விளைவிக்கும்.
![ஹெட்ஃபோன் பயன்படுத்துபவரா நீங்கள்… காது கேட்காமல் போகும் அபாயம்! தவிர்ப்பது எப்படி? Are you a headphone user at risk of hearing loss How to avoid ஹெட்ஃபோன் பயன்படுத்துபவரா நீங்கள்… காது கேட்காமல் போகும் அபாயம்! தவிர்ப்பது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/2a9c712c08270dd6b7f07640e916207b1687859403915109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உரத்த சத்தங்கள் கேட்டால் காதுகளுக்கு சேதம் ஏற்படுவது நமக்கு தெரியும். ஆனால் அது ஹெட்ஃபோன்களாலும் ஏற்படும் என்பது பயன்படுத்தும் பலருக்கு ஆச்சர்யம்தான். noise-induced hearing loss (இரைச்சல் தூண்டப்பட்ட செவித்திறன் இழப்பு) என்று அழைக்கப்படுகிறது இந்த பாதிப்பு. பொதுவாக நம் காதுகள் வெளியில் இருந்து வரும் ஓசையை அதிர்வுகள் ஏற்று மூளைக்கு ஆற்றலாக அனுப்பும். அந்த அதிர்வுகளை ஏற்க உணர்திறன் ஏற்பிகள் காதுக்குள் சிறிய செல்களாக இருக்கும். ஹெட்ஃபோன்களில் இருந்து உரத்த ஒலி வெளிவரும்போது, அந்த செல்கள் வளைந்துவிடும். உரத்த ஒலிகளைக் கேட்ட பிறகு போதுமான நேரம் ஓய்வு வழங்கப்பட்டால், இந்த செல்கள் மீட்க முடியும், இல்லையெனில், அது நிரந்தர சேதத்தை விளைவிக்கும்.
அதிக சத்தம் மட்டும் ஆபத்தில்லை
மிகவும் சத்தமாக ஹெட்ஃபோன்கள் பயன்படுத்தினால் மட்டும், காதுகள் சேதம் ஆகும் என்றில்லை. மிதமான ஒலியில் இயர்பட்கள் அல்லது ஹெட்ஃபோன்களைக் கேட்பது கூட காலப்போக்கில் உங்கள் செவித்திறனில் சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனென்றால், காதுகளுக்கு ஏற்படும் சேதம் சத்தத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல, அதில் இருந்து வெளிப்படும் அதிர்வுகளின் நீளமும் பாதிக்கக் கூடியதுதான். ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்ஸ் போன்ற ஆடியோ சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் 1 பில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் காது கேளாத அபாயத்தில் இருப்பதாக புதிய ஆய்வு காட்டுகிறது.
அறிகுறிகள்
காதில் சத்தம், கர்ஜனை, மெதுவான சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பது, சத்தமான இடங்களில் பேச்சைப் புரிந்துகொள்வதில் உள்ள சிரமம், முணுமுணுப்பு ஒலிகள் மற்றும் உங்கள் காது அடைக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வு, முன்பை விட அதிக ஒலியில் டிவி அல்லது மொபைல் பயன்படுத்துவது ஆகியவை இதன் அறிகுறியாகும். செவித்திறன் பாதிப்பை உண்மையாகக் கண்டறிய செவிப்புலன் பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனை மட்டுமே வழி. இயர்பட்களை அதிக நேரம் அல்லது அதிக சத்தமாக பயன்படுத்தாமல் இருந்தால், சத்தத்தால் ஏற்படும் காது கேளாமை 100% தடுக்கப்படும்.
60/60 விதி
'60%/60 நிமிடம்' என்னும் விதியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இசையைக் கேட்கும்போது, அல்லது திரைப்படம் அல்லது வீடியோ கேம் விளையாடும் போது, அதிகபட்ச ஒலியளவில் 60%க்கு மேல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அதோடு உங்கள் காதுகளில் இயர்பட்கள் வைத்திருக்கும் நேரம் 60 நிமிடங்கள் மட்டும் இருக்க வேண்டும். அதன்பின் கொஞ்ச நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும்.
நாய்ஸ் கேன்ஸலேஷன் ஹெட்ஃபோன்
ANC/ENC ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தவும். பெரும்பாலான சீர்ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துபவர்கள், பிற பின்னணி இரைச்சலை தவிர்க்க, அதிக அளவில் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதுடன், அதிக ஒலியில் கேட்கின்றனர். காதுகளைப் பாதுகாப்பதற்காக ஒலியளவைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழி, Noice Cancellation (சத்தம்-ரத்து செய்யும்) ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதுதான். ANC (Active Noice Cancellation), ENC (Environmental Noice Cancellation) என்று பல வகை ஹெட்ஃபோன்கள் இப்போது மார்கெட்டில் கிடைக்கின்றன. அவை பின்னனி ஒலிகளை தடுத்து உங்களை அமைதியான சூழலில் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்த அனுமதிக்கின்றது. இதனால் நாம் தானாகவே குறைந்த ஒலியில் பாடல் கேட்பதை தேர்ந்தெடுப்போம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)