பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு இயக்குநர் சுதா கொங்காராவிற்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

பராசக்தி திரைப்படத்தில் 8 கோடி சம்பள பாக்கி இருப்பதாக இயக்குநர் சுதா கொங்காரா டான் பிக்ச்சர்ஸ் மேல் வழக்கு தொடுத்திருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பள பாக்கியே 8 கோடி என்றால் சுதா கொங்காராவுக்கு இந்த படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் பேசப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் பராசக்தி படத்திற்காக சுதா கொங்காராவிற்கு மொத்தம் 15 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
துரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் சுதா கொங்காரா. முதல் படம் தோல்வியை சந்தித்தாலும் இறுதி சுற்று , சூரரைப் போற்று என அடுத்தடுத்த பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக இடம்பிடித்தார். இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறை மையமாக வைத்து இவர் இயக்கிய படம் பராசக்தி. சிவகார்த்திகேயன் , அதர்வா , ரவி மோகன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரித்தார்
வசூலில் தோல்வி
சுமார் 150 கோடி பட்ஜெட்டில் பராசக்தி திரைப்படம் உருவாகி கடந்த ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் படமும் வெளியாக இருந்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தடைபட்டது. இதனால் போட்டியே இல்லாமல் பராசக்தி திரைப்படம் வெளியாகி பெரும் வசூல் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அப்படத்திற்கு திறந்திருந்தன. ஆனால் படம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெறவே வசூலில் பராசக்தி தோல்வியை தழுவியது. உலகளவில் இப்படம் ரூ84.8 கோடி மட்டுமே வசூல் செய்தது. இப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கு படத்தின் லாபத்தின் பங்கு தருவதாகவே முதலில் சம்பளம் பேசப்பட்டது.
சுதா கொங்காராவுக்கு எவ்வளவு சம்பளம்
பராசக்தி திரைப்படத்திற்காக தனக்கு ₹15 கோடி சம்பளம் மற்றும் 15% லாபப் பங்கு தருவதாக உறுதியளிக்கப்பட்டதாக சுதா கொங்காரா தெரிவித்துள்ளார். ஆனால், தயாரிப்பு நிறுவனமான 'டான் பிக்சர்ஸ்' இதுவரை ₹6.71 கோடியை மட்டுமே வழங்கியுள்ளது. மீதமுள்ள ₹8.39 கோடியைப் பெற்றுத் தருமாறு கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
தயாரிப்பு நிறுவனத்திடம் பிணையமாகப் பெறக்கூடிய உறுதியான சொத்துகள் ஏதுமில்லாததால், ஜூலை 10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இதயம் முரளி திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுத்து நிறுத்தக் கோரி அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி, முழு சம்பளமும் வழங்கப்பட்ட பின்னரே அறிவுசார் சொத்துரிமை மற்றும் அது சார்ந்த பிற உரிமைகள் மாற்றப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.
நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை, பிப்ரவரி 8 முதல் 12% வட்டியுடன் வழங்குமாறு அவர் கோரியுள்ளார். மேலும், அப்படத்தின் OTT மற்றும் செயற்கைக்கோள் வெளியீட்டைத் தடை செய்யுமாறும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், 'டான் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்குச் சேர வேண்டிய தொகையை 'Zee5' நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்துமாறும், வழக்கு முடியும் வரை அத்தொகையை நீதிமன்றமே பெற்று வைத்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















