CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
அரசின் செயல்பாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் முக்கிய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் முடிவு எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை முதன்மையானதாக கூறும் விஜய் லஞ்சத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பதிலும் மிகவும் திட்டவட்டமாக உள்ளார்.
தலைவலி தரும் லஞ்சம்:
இதன் காரணமாகவே கரூரில் நடந்த கூட்டத்தில் லஞ்சம் யாரேனும் கேட்டால் தர இயலாது என்று கூறுமாறு பொதுமக்களிடம் கூறினார். லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டடைத் தெரிவிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண் ஒன்றையும் தவெக அரசு அறிவித்துள்ளது. லஞ்சத்தை ஒழித்தே தீர வேண்டும் என்ற விஜய்யின் இந்த விடாப்பிடியான முடிவு அதிகாரிகள் பலருக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாக உள்ளது. கடந்த கால ஆட்சிகளில் அரசியல்வாதிகளை காட்டிலும் அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் ஊழலில் திளைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழலில், அமைச்சர்களுக்கு இந்த விவகாரத்தில் விஜய் மிக கடினமான உத்தரவைப் பிறப்பித்திருப்பதால் அதிகாரிகள் பலராலும் அமைச்சர்களின் பெயரால் கல்லா கட்ட இயலாத சூழல் உள்ளது.
ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள்:
இந்த நிலையில், சில அரசு அதிகாரிகள் தங்கள் பணியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதியதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கும் கீர்த்தனா, ராஜ்மோகன் வெளிநாடு சென்ற விவகாரத்தில் அவர்கள் டிப்ளமோட்டிக் பாஸ்போர்ட்டில் செல்ல வேண்டும் என்பதை அதிகாரிகளே உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
அதேபோல, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கையில் கடந்த ஆட்சியில் தேவையற்ற செலவினங்கள் குறித்த தரவுகளை அதிகாரிகள் அளிக்கத் தவறியதாகவும் கூறப்படுகிறது. லஞ்ச லாவண்யமற்ற அரசை வழங்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் விஜய்க்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிலர் தலைவலியாக உள்ளனர்.
நடவடிக்கைக்கு ரெடியான விஜய்:
அதிகாரிகள் தவறு செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் அமைந்தது. கடந்த ஆட்சியில் இடம்பெற்றிருந்த பல்வேறு அதிகாரிகளே இந்த ஆட்சியிலும் உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து வருகின்றனர். இதுவும் விஜய்க்கு ஒரு சவாலாக உள்ளது.
மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையில் ஒத்துழைக்க மறுக்கும் அதகிாரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் முதலமைச்சர் விஜய் விரைவில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















