Sivakarthikeyan Bungalow : பனையூரில் தவெக அலுவலகம் அருகில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய பங்களா
பனையூரில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலம் அருகில் பிரம்மாண்டமாக தனது புதிய வீட்டை கட்டி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மறுபக்கம் தனது புதிய வீட்டு கட்டுமான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எஸ்.கே. விஜயின் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தின் அருகில் உருவாகி வரும் இந்த வீடு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயனின் பராசக்தி
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கரியர் பெஸ்ட் படமாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தபடியாக சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். டான் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரவி மோகன் , அதர்வா , ஶ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. விஜயின் ஜனநாயகன் படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இரண்டு படங்களுக்கும் வசூல் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.
பனையூரில் புதிய வீடு
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் தனது புதிய வீட்டை கட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரையில் வசித்து வந்த சிவகார்த்திகேயன் தான் இருந்த வீட்டை புனரமைத்து 3 ஏக்கரில் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை கட்டி வருகிறார். தற்போது தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமான வீட்டில் தனது குடும்பத்துடன் அவர் தற்காலிகமாக வசித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இந்த புதிய வீடு விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்யும் விதமாக இந்த வீட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஜிம் வசதி உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பராசக்தி படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத் தக்கது. அண்மையில் சிவகார்த்திகேயன் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்து வந்தார். இதனால் கூடிய விரைவில் இந்தி படத்திலும் அவர் நடிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது






















