விஜய்க்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது.. எல்லாம் எஸ்.ஏ.சி பண்ண வேலை.. ஷோபா ஓபன் டாக்!
விஜய் அரசியலுக்கு வந்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம் அவர் சிறுவயதில் இருந்து ரொம்ப அமைதியானவராக வளர்ந்தார். முதலமைச்சராக பொறுப்பேற்றதை கூட நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை என ஷோபா கூறியுள்ளார்.

விஜய் முதலமைச்சராக வருவார் என்பதை என் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் முதலில் கணித்தவர் என ஷோபா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய் 2024ம் ஆண்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். இந்த நிலையில் விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரின் அம்மா ஷோபா சந்திரசேகர் நேர்காணல் ஒன்றில் பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.
அதில், “விஜய் முதலமைச்சரானதில் மிகப்பெரிய அளவில் ஒரு தாயாக பெருமையாக இருந்தது. முதல்வராக முதல் பிறந்தநாளை கொண்டாடுவதில் இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் பிறந்தநாள் தான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அவர் பிறந்தபோது எனக்கு 17 வயது தான் ஆகியிருந்தது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தான் விஜய் பிறந்தார். எனக்கும் விஜய்க்கும் ஜோதிடத்தில் ஒரே லக்னம். அதனால் பிணைப்பு ரொம்ப சிறப்பாக இருக்கிறது.
மேலும் விஜய் அரசியலுக்கு வந்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம் அவர் சிறுவயதில் இருந்து ரொம்ப அமைதியானவராக வளர்ந்தார். முதலமைச்சராக பொறுப்பேற்றதை கூட நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை. அந்ந தருணத்தில் மகிழ்ச்சி பொங்க நானும் என் கணவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். விஜயை விட அவர் முதல்வராக வேண்டும் என்பது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் கனவாக இருந்தது. 2009ல் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பல்வேறு வகையில் உதவி செய்தார்கள்.
அப்பாவும், மகனும் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு விதைப்போட்டு வளர்த்து வந்தார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர் மனதில் அந்த எண்ணம் இருந்ததால் தான் விஜய் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார். மகனுக்கு வந்த மாஸை பார்த்து தான் அப்போதே எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் கண்டிப்பாக முதலமைச்சராக வருவார் என நினைத்திருந்தார். தேர்தலில் வென்றவுடன் அப்பாவிடம் வந்து உங்க கனவை நிறைவேற்றி விட்டேன் என மகிழ்ச்சியுடன் சொன்னார்” என ஷோபா கூறினார்.
Also Read: திமுகவுக்கு தாங்க முடியாத வயித்தெரிச்சல்.. என்னை ஒன்னுமே செய்ய முடியாது.. அமைச்சர் ரமேஷ் சவால்!
அதேசமயம் விஜய்க்கு அட்வைஸ் சொல்வதே பிடிக்காது. அதனால் தான் முதலமைச்சரானதும் நான் எதுவும் சொல்லவில்லை. 2023ம் ஆண்டு தான் விஜய் அரசியலுக்கு வரப்போகிறேன் எங்கள் இருவரையும் அழைத்து சொன்னார். நானும், என் கணவரும் எங்கள் தரப்பு கருத்தை சொன்னோம். ஆனால் நான் முடிவு பண்ணிட்டேன் என திட்டவட்டமாக கூறினார். சினிமாவில் விஜய்க்கு தொடக்கத்தில் பல விமர்சனங்கள் தான் கிடைத்தது. அதனை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு ஜெயித்து காட்டினார். அதேசமயம் விஜய் அரசியலுக்கு வந்தது பயமாகத்தான் இருந்தது. யாரும் சப்போர்ட்டுக்கு வரவில்லை. சில எதிர்பாராத விஷயங்கள் நடந்தபோது மகன் அரசியலுக்கு வராமல் இருந்திருக்கலாம் என தோன்றியது.
பொதுவாகவே விஜய் அதிகமாக பேச மாட்டார். தன் ஆற்றலை செயலில் காட்ட வேண்டும் என நினைப்பார். அதனை வார்த்தைகள் மூலம் வீணாக்க விரும்ப மாட்டார். அதேபோல் வாக்குவாதம் செய்வதும் எப்போதும் பிடிக்காது” என ஷோபா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















