Actor Vishal: நடிகர் விஷால் அளித்த புகார்! - சிக்கலில் தணிக்கை வாரியம்! மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி
மார்க் ஆண்டனி படம் இந்தி வெளியீட்டிற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டிய நிலையில் அதுகுறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மார்க் ஆண்டனி படம் இந்தி வெளியீட்டிற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டிய நிலையில் அதுகுறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் “மார்க் ஆண்டனி”. விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். போன் மூலம் டைம் டிராவல் என்ற விஷயத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட மார்க் ஆண்டனி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
முன்னதாக மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில் பிரபலமான பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்தது தொடங்கி மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை ரீ-கிரியேட் செய்தது வரை என பல சிறப்பான அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. இதனால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தனர். இதனால் மார்க் ஆண்டனி படம் ரூ.100 கோடி வசூலைப் பெற்றதாக வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.1-ஐ விவசாயிகளுக்கு வழங்கப்போவதாக அறிவித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று ட்விட்டரில் மத்திய சென்சார் போர்டு அதிகாரிகள் மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை விஷால் முன்வைத்தார். அதன்படி, ”மார்க் ஆண்டனி' படத்தை பார்க்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் கேட்டனர். மேலும் சான்றிதழ் வழங்க ரூ.3.5 லட்சம் பணம் கேட்டனர். எனது கேரியரில் இப்படியான ஒரு நிலையை சந்தித்ததில்லை. தான் மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ.6.5 லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்தேன், அதன் பிறகே 'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிட்டேன் என நடிகர் விஷால் கூறியிருந்தார்.
இது திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மீதானநடிகர் விஷாலின் ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக சகித்து கொள்ள முடியாதது. உடனடியாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்த உள்ளார்.
jsfilms.inb@nic.in என்ற முகவரியில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் வேறு ஏதேனும் நிகழ்வுகள் பற்றிய தகவலை வழங்குவதன் மூலம் அமைச்சகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















