Seyon: டைட்டிலே பஞ்சாயத்து.. சோதனை செய்யும் முருகன்.. சிவகார்த்திகேயன் தப்புவாரா?
அமரன் படத்துக்குப் பின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் “சேயோன்”. இப்படத்தின் டைட்டில் ஷூட்டிங் முன்னரே பிரச்னையை எதிர்கொண்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள சேயோன் படத்தின் டைட்டிலுக்கும் செய்யப்படும் பிரச்னை தற்செயலானது அல்ல என மாயோன் படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியுள்ளார்.
சேயோன் டைட்டில் பிரச்னை
அமரன் படத்துக்குப் பின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் “சேயோன்”. இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. ஆனால் ஷூட்டிங் செல்லும் முன்னரே இந்த படம் பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. அதாவது 2023ம் ஆண்டில் சிபி சத்யராஜை வைத்து மாயோன் என்ற படம் வெளியானது. இந்த படத்தின் 2ம் பாகத்திற்கு சேயோன் என்ற டைட்டிலை பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் படத்திற்கும் அதே தலைப்பு வைக்கப்படுவதற்கு மாயோன் தயாரிப்பு நிறுவனம் ஆட்சேபனை தெரிவித்தது.
வேண்டுமென்றே பிரச்னை
இந்த நிலையில் மாயோன் படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேயோன் படத்தின் டைட்டிலை நாங்கள் தான் முதலில் பதிவுச் செய்தோம். இதற்கு முன்னால் அதனை யாரும் பதிவு செய்யவில்லை. சேயோன் படக்குழுவும் அப்படியாக செய்யவில்லை. நாங்கள் தொடர்ச்சியான பாகங்களுடன் இந்த கதையை உருவாக்கினோம். கடந்த 4,5 ஆண்டுகளாக கதை உருவாக்கிய நிலையில் அதற்கேற்ப டைட்டில் கிடைத்துள்ளது. இந்த படம் நவபாஷன முருகன் சிலையை மையப்படுத்திய கதையாகும்.
இப்போது வந்துள்ள பிரச்னை சிவகார்த்திகேயனுக்கோ, கமலுக்கோ எதிரான பிரச்னையாக இல்லை. சினிமா துறை எல்லாருக்குமான ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது அப்படி இல்லை. இந்த டைட்டில் பிரச்னை சம்பவமாக மட்டுமல்லாமல் எல்லா தயாரிப்பாளர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு புதிதாக வரும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். தயாரிப்பாளர்களே இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
10 வெற்றி படம் எடுத்த தயாரிப்பாளர் ஒரு தோல்வி படம் எடுத்தால் அவ்வளவு தான். ஆனால் நடிகர்கள் அப்படியில்லை 10 தோல்வி படம் கொடுத்து ஒரு படம் வெற்றி பெற்றாலும் நிலைக்க முடியும். எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த துறையில் சிலர் பாதிக்கப்படுவார்கள்.
2023ம் ஆண்டு இந்த டைட்டிலை தேர்வு செய்து விட்டோம். ஆனால் எங்கள் பக்கம் ஒரு தவறு உள்ளது. அந்த டைட்டிலை நாங்கள் புதுப்பிக்காமல் விட்டு விட்டோம். அதை நிர்வாகிகள் தெரிவிக்காமல் வேண்டுமென்றே அந்த டைட்டிலை ஒரே மாதத்தில் எதிர் தரப்பினரிடம் கொடுத்தது போல உள்ளது. இப்படித்தான் இன்றைய சிஸ்டம் உள்ளது. ஒரு விஷயத்தை நாம் புதுப்பிக்க வேண்டி இருந்தால் நினைவூட்ட வேண்டும். அதை இனியாவது சரியாக செய்ய வேண்டும்.
நாங்கள் முதலில் புகார் கொடுத்தபோது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அலட்சியமாக நடந்துக் கொண்டார்கள். இதில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டப்படி வழக்கை சந்திக்கவும் தயாராக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.























