Balan Movie Review : மீண்டும் அசத்திய மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர்..பாலன் திரைப்பட விமர்சனம்
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பாலன் திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்

கடந்த ஆண்டு மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் கவனமீர்த்தவர் சிதம்பரம். இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் பாலன். ஃபர்சானா பாலதிங்கல், ஆதிசேஷன் , ஸினான் , ஜான் பால் லால் , கிரிஷ் ஏடி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். கேவிஎன் ப்ரோடக்ஷ்ன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
பாலன் படத்தின் கதை
ஒரு அம்மாவும் (ஃபர்சானா பாலதிங்கல்) அவரது மகனும் (ஆதிசேஷன்) ஆகிய இருவரை சுற்றி நகர்கிறது கதை. படத்தின் தொடக்கத்தில் சிறையில் இருந்து வெளிவரும் இருவரும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்கள் மற்றும் அடையாளங்களுடன் கிடைத்த வேலையை செய்து பிழைத்து வருகிறார்கள். அம்மா பேச்சை தட்டாமல் கேட்பனாக இருக்கிறான் சிறுவன். ஒவ்வொரு ஊரிலும் தங்களை சின்னதாக ஒரு பிரச்சனை ஏற்பட்டால் உடனே அம்மா வேறு ஊருக்கு கூட்டிச் செல்கிறார். அவர் சொல்லும் புது கதையை தனது கதையாக சிறுவன் மனப்பாடம் செய்கிறான். கடைசியாக ஒரு வயதான பெண் ஒருவரை கவனிக்கொள்ள ஒரு வீட்டிற்கு இருவரும் செல்கிறார்கள். அவருடன் இருவருக்கும் நெருக்கம் ஏற்படவே அங்கு கொஞ்ச காலம் தங்குகிறார்கள் .வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அம்மா பையன் ஏன் இருவரும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என தெரியவருகிறது. தனது இறப்பிற்கு பின் இருவரும் இதே வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என கிழவி சொல்ல அப்படியே செய்கிறார்கள். ஆனால் எதிர்பாராத பல திருப்பங்களால் அம்மாவும் பையனும் இருவரும் பிரிய வேண்டிய சூழல் உருவாகிறது. அம்மாவும் மகனும் கடைசியில் ஒன்றாக நிம்மதியான தங்களுக்கு பிடித்த தனிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்களா என்பதே பாலன் படத்தின் கதை.
விமர்சனம்
மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தில் நட்பு என்கிற அடிப்படையான உணர்ச்சியை கொண்டு ஒரு நல்ல கமர்சியல் சினிமா அனுபவத்தை வழங்கினார் சிதம்பரம். பாலன் படம் ஒரு அம்மா மகன் இடையிலான பிரிக்க முடியாத பந்தத்தை மையமாக கொண்டிருக்கிறது. ஆனால் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்திற்கு நேரெதிராக எந்த வித சினிமாத்தனங்களும் இல்லாமல் முழுக்க முழுக்க கதைக்கு நேர்மையாக பாலன் படத்தை கையாண்டுள்ளார். கதாபாத்திரங்களின் முன்கதை எதுவும் சொல்லப்படாவிட்டாலும் அம்மா மகனின் இந்த நாடகத்தில் பார்வையாளர்களை ஒன்ற வைக்கிறார். மெல்ல மெல்ல கதையை சுவாரஸ்யப்படுத்தி த்ரில்லரான ஒரு இடைவேளையை நோக்கி படம் நகர்கிறது. அதே விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் எதிர்பார்க்கையில் முற்றிலும் புதிய கோணத்தில் இருந்து கதையை தொடங்கி இரண்டு பாதிகளையும் இணைத்திருக்கிறார்.
அம்மாவாக நடித்திருக்கும் ஃபர்சானா பாலதிங்கல் நடிப்பில் அசத்தியிருக்கிறார். எதுவுமே பேசாவிட்டாலும் அவரது சின்ன சின்ன ரியாக்ஷன்கள் , பார்வை கதையில் சொல்லப்பட்டாத பல விஷயங்களை உணர்த்துகிறது. சிறுவனாக நடித்துள்ள ஆதிசேஷன் மற்றும் அவனது வளர்ந்த தோற்றத்தில் நடித்துள்ள ஸினான் இருவரும் கதாபாத்திரங்களை கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். சுஷின் ஷியாமின் பின்னணி இசை சிறப்பு.
மஞ்சும்மெல் பாய்ஸ் படம் பிடித்தவர்கள் அதே எதிர்பார்ப்பில் பாலன் படத்தை அனுகாமல் பாலன் படத்தை பார்த்தால் அக்கதை நிச்சயம் ஒரு புது அனுபவத்தை தரும் படமாக இருக்கும் .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















