பச்ச துரோகம்.. நிச்சயமானதை மறைத்து டேட்டிங் அழைத்த நடிகர்... மம்தா மோகன்தாஸ் வேதனை!
நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில் பிறகு, ஒரு பெண்ணாக எனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்பினேன். அப்போது ஒரு பிரபலமான மலையாள நடிகர் என்னை டேட்டிங் செல்ல அழைத்தார் என மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.

நான் மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன் என பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஷால் நடித்த சிவப்பதிகாரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து குரு என் ஆளு, தடையறத் தாக்க, எனிமி, மகாராஜா என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவராக திகழ்ந்தவர். ரஜினி நடித்த குசேலன் படத்தின் கேமியோ கேரக்டரில் மம்தா நடித்திருப்பார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழும் மம்தா மோகன்தாஸ் தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.
இதனிடையே இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்து ரசிகர்களுக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளித்துள்ளார்.
இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதன்படி, “எனக்கு காதல் செய்வது அல்லது டேட்டிங் செய்வது போன்ற விஷயங்களில் அதிக அனுபவம் இல்லை. ஆனால் நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில் பிறகு, ஒரு பெண்ணாக எனது சொந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்பினேன். அப்போது ஒரு பிரபலமான மலையாள நடிகர் என்னை டேட்டிங் செல்ல அழைத்தார். அதற்கான நான் என் அம்மாவின் ஒப்புதலையும் பெற்றேன்.
ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு தான் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது என்பதை என்பதை நான் கண்டுபிடித்தேன். அதை என்னிடம் அவர் மறைத்திருந்தார். அது ஒரு உண்மையிலேயே அதிர்ச்சியான விஷயமாக அமைந்தது. பின்னர், நான் வேறொருவரை சந்தித்தேன், ஆனால் அவர் என் நேரத்தை வீணடித்தார். அதனால் இந்த காதலும் டேட்டிங்கும் தேவையற்றது என்பதை உணர்ந்துக் கொண்டேன்.
தொடர்ந்து தனது முன்னாள் கணவர் பிரஜித் பற்றி பேசிய மம்தா, “எனது சகோதரியின் திருமணத்தில் தான் முதல்முதலாக பிரஜித்தை சந்தித்தேன். எங்கள் இருவருக்குமான பிடித்த விஷயங்கள் பொதுவானதாக இருந்தால் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தோம். பிரஜித் தான் அதனை முதலில் கேட்டார். எனக்கும் அது சரி என பட்டது. உடனடியாக என் தந்தையிடம் விருப்பத்தை சொன்னேன். எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது. திருமணத்தை வாழ்நாள் முழுவதுக்குமான உறவாக நினைத்தேன். ஆனால் 6 மாதத்தில் நாங்கள் பிரிய நேர்ந்தது. அது மிகவும் கடினமான முடிவு. இருந்தாலும் அந்நேரம் நான் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.
மேலும் மீண்டும் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், ஆனால் அது உண்மையான உறவாக இருக்க வேண்டும். வாழ்க்கையை அர்ப்பணிப்புடன் செய்வதில் இருவரும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்க வேண்டும் என்றும் மம்தா கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி வைரலாகியுள்ளது. இதனிடையே மம்தா மோகன்தாஸ் தமிழில் அருள்நிதி நடிக்கும் மை டியர் சிஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.























