Sivakumar: 85 வயதிலும் இளமை.. எம்ஜிஆர் தான் காரணம்.. ரகசியம் சொன்ன சிவகுமார்!
எனக்கு 85 வயதாகிறது. பார்ப்பதற்கு கிழவன் மாதிரியாக தெரிகிறேன். கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் 35 பேருக்கு டெஸ்ட் எடுத்தார்கள். அதில் எனக்கு அந்த வேடம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என சிவகுமார் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் எனக்கு கொடுத்த சாபம் காரணமாக தான் இன்றும் நான் இளமையாக இருக்கிறேன் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக சிவகுமார் திகழ்கிறார். 1965ம் ஆண்டு நடிக்க வந்த அவர் கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதேசமயம் அனைத்து வயதினரும் வியந்து பார்க்கும் அளவுக்கு சிவகுமார் சிறந்த ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார்.
சென்னையில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சார்பில் பத்மஸ்ரீ அவ்வை சண்முகத்தின் 114 வது பிறந்தநாள் விழாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பழம்பெரும் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “எம்ஜிஆர் 1979ம் ஆண்டு நடைபெற்ற என்னோட 100வது பட விழாவில் ஒரு விஷயம் சொன்னார். முருகன் என்றால் அழகு, இளமை. இந்த சிவகுமார் அவன் வாழும் காலம் வரை இளமையாக இருப்பார் என சாபம் கொடுத்து விட்டு சென்றார். இப்போது எனக்கு 85 வயதாகிறது. பார்ப்பதற்கு கிழவன் மாதிரியாக தெரிகிறேன். கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் 35 பேருக்கு டெஸ்ட் எடுத்தார்கள். அதில் எனக்கு அந்த வேடம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் டெஸ்ட்க்கு சென்ற நிலையில் ஆளுயர கண்ணாடியில் என் உருவத்தைப் பார்த்து ஷாக் ஆனேன்.
காரணம், விபூதி, நகை, ஆடை எல்லாம் போட்டு விட்டு தலையில் கிரீடம், கையில் வேல் எல்லாம் கொடுத்து பார்த்தால் அச்சு அசல் முருகனைப் பார்த்தது போல இருந்தது. பின்னர் ஷுட்டிங் நடக்கும் செட்டுக்கு சென்றேன். அங்கே மலையை வரைந்து வைத்திருந்தார்கள். என்னை நிற்க வைத்து வசனம் சொல்ல சொன்னார்கள். அதனை நிதானமாக படித்து விட்டு வந்து சொன்னால் போதும் என நீட்டிச் சொன்னார்கள். அப்படி என்ன வசனம் என கேட்க, வீரபாகு தூது செல் என ஆரம்பிக்கும் வசனங்கள் கொடுக்கப்பட்டது. அதை வைத்து முகத்தின் பாவனைகளை குறித்துக் கொண்டார்கள். வசனத்தின் கடைசியில் நான் பேசிய பாவனை முருகனுக்கு திமிர் இருப்பது போல இருந்தது. அதை எப்படி சாந்தமாக சொல்ல வேன் டும் என ஏ.பி.நாகராஜன் சொல்லிக் கொடுத்தார்.
சிவகுமாரின் 100வது படமாக 1979ம் ஆண்டு ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் வந்தது. தேவராஜ் - மோகன் இயக்கிய இந்த படத்தில் தீபா ஹீரோயினாக நடிக்க இளையராஜா இசையமைத்திருந்தார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி பட மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















