Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
100 கோடி ரூபாய் மதிப்பிலான பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பான பத்திரம் வெளியாகி அதிர வைத்துள்ளது.
பழனி அடிவாரத்தில் சுமார் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம், கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமானது. சுமார் ¬100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலம், கோயிலின் அனுமதி மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி, தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர் ரமேஷின் உறவினர் இந்த நிலத்தை வாங்கியதாக புகார் எழுந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்தநிலையில் நிலம் அபகரிக்கப்பட்டது எப்படு என்பது தொடர்பான பத்திரம் நகல் வெளியாகியுள்ளது. மார்ச் 27ம் தேதி கையெழுத்தான பத்திரம் ஜூன் 6ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரத்தில் தண்டபாணி மடம் தனியார் அறக்கட்டளை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை சொத்துகளில் இருந்து பெறும் வருவாய் மூலம் தர்மகாரியங்கள் செய்வது வழக்கம் என பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத காரணத்தினால் விற்பனை செய்வதாகவும், இந்த நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு கேட்டதே அதிக விலை என்றும் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலத்தை வாங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் காசோலைகள் 4 என மொத்தம் 2 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த முழுமையான அறிதலுடனும், அதன் தீர்ப்பு முடிவுகளுக்கு உட்பட்டும் சொத்தை வாங்க ஒப்புக் கொண்டுள்ளதாக பத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மதுரை உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் நிலம் அபகரிப்பு தொடர்பான விவகரங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்






















