Propose Day : ப்ரபோஸ் பண்ண போறீங்களா...? இந்த சீன்ஸ் எல்லாம் பார்த்துட்டு போங்க
Best Proposal Scenes in Tamil Movies : இன்று பிப்ரவரி 8 ஆம் தேதி ப்ரபோஸல் தினத்தன்று தமிழ் படங்களில் வெளியான சிறந்த ஐந்து ப்ரபோஸல் காட்சிகளைப் பார்க்கலாம்

அலைபாயுதே
ஒரே காட்சியை பல படங்களில் ரிகிரியேட் செய்திருக்கிறார்கள். ஆனால் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் இன்னொரு முறை ரிகிரியேட் செய்ய முடியாத ஒரு காட்சி தான் அலைபாயுதே படத்தில் கார்த்திக் சக்தியிடம் காதலை சொல்லும் காட்சி. இன்னும் சொல்லப்போனால் மாதவன் ஷாலினியிடம் காதலை சொல்வதில்லை. எங்கு தான் அவளை காதலித்து விடுவோமோ என்கிற பயத்தை தான் அவன் வெளிப்படுத்துகிறான். எத்தனை ப்ரபோஸ் டே வந்தாலும் அலைபாயுதே படத்தின் இந்த காட்சி தான் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
பருத்தி வீரன்
மணிரத்னமின் காவியக் காதலுக்கு ஒரு தனி ரசிகர்கள் இருப்பது போல் எளிமையான மனதிற்கு நெருக்கமான கிராமிய காதலுக்கு இன்னொரு தரப்பு ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பருத்தி வீரன் படத்தில் பிரியாமனியிடம் கார்த்தி காதலை தெரிவிக்கும் காட்சி ஒரு கிளாசிக். வானவேடிக்கை காட்டி பூ மலை பொழிந்து காதலை சொல்வதை விட தத்தி தத்தி தனக்கு தெரிந்த மொழிகளில் சொல்லப்படும் காதலின் பிரம்மாண்டம் தான் இந்த காட்சி.
வாரணம் ஆயிரம்
கெளதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் ஒன்றல்ல இரண்டு ப்ரபோஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தவை. காதலுக்கு லாஜிக் தேவையில்லை தான். பார்த்தவுடனே ஒருவர் மீது காதல் வரலாம். ஆனால் நம் மனதில் உணரும் அந்த காதலை எதிரில் இருப்பவரும் நம்பவேண்டும் இல்லையா. அதற்கு உள்ளத்தில் இருந்து நம்பகமான வார்த்தைகள் தேவை. அப்பா சூர்யா சிம்ரனிடம் காதலை சொல்வதும் , மகன் சூர்யா சமீரா ரெட்டியிடம் காதலை சொல்வதும் அப்படிதான். குறைவான வார்த்தைகள் ஆனால் இந்த வார்த்தைகளின் ஆழத்தை நம்மால் உணர முடியும்
தனி ஒருவன்
பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு ப்ரபோஸல் காட்சி தனி ஒருவன் படத்தினுடையது. நாயகி நயன்தாரா படத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜெயம் ரவியை காதலித்தாலும் ஜெயம் ரவி அந்த காதலை ஏற்றுக் கொள்வதில்லை. படத்தின் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் இந்த காதல் கதையுடன் மிக பொருத்தமாக இடம்பெற்றிருந்தது. பயம் , மகிழ்ச்சி என பல உணர்ச்சிகளை பார்வையாளருக்கு கடத்தியது இந்த காட்சி
மெட்ராஸ்
காதல் எல்லா நேரமும் இழுத்து அடித்துதான் சொல்லப்பட வேண்டும் என்றில்லை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்றும் சொல்லப்படலாம். அப்படியான ஒரு காட்சிதான் மெட்ராஸ் படத்தில் கலையரசி மற்றும் காளிக்கு இடையிலான ப்ரபோஸல் காட்சி. அதிரடியாக சொல்லப்படும் ஒரு காதல் யானை வந்து மோதுவது போலத்தான். தாங்கிக் கொள்ளும் தைரியம் இருந்தால் " நீதான் வேணும் கல்யாணம் பண்ணிகிறியா " என்று நேராக கேட்டுவிட வேண்டியது தானே.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

