Sundar C: தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகுவேன்.. சுந்தர்.சி அறிவிப்பு!
நான் ஜெயித்தால் முழுநேரமாக மதுரை மத்தி எம்.எல்.ஏ.,வாக தான் என் வாழ்க்கை இருக்கும். என்னுடைய தேவைகள் மிகவும் குறைவு என்பதால் சினிமாவில் இருக்க மாட்டேன் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

அரசியல் என்பது பகுதி நேர வேலை கிடையாது. நான் தேர்தலில் ஜெயித்தால் முழுநேர மக்கள் பணி செய்வேன் என நடிகரும், அரசியல்வாதியுமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (மே 4) எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் நிலையில் யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இப்படியான நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநரான சுந்தர்.சி வேட்பாளராக களமிறங்கினார்.
திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அவர் களமிறங்கியது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. தனது அசாத்தியமான பேச்சால் தேர்தல் களத்தை மட்டுமல்லாமல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆட்டம் காண வைத்தார். இந்த தேர்தலில் தான் மகத்தான வெற்றி பெறுவேன் சுந்தர்.சி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
அஜித் அரசியலுக்கு வர வேண்டும்
இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநரும், அரசியல்வாதியுமான சுந்தர்.சி-யிடம் அரசியலுக்கு சினிமாவில் இருந்து யாரையாவது அழைத்து வர வேண்டும் என்றால் உங்கள் தேர்வு எப்படி இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சினிமாவில் இருந்து விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். இன்னொருத்தர் வர வேண்டும் என கேட்டால் அஜித்தை வர சொல்லுவேன். ஏனென்றால் அஜித்துடன் பல ஆண்டுகளுக்கு முன் தனிப்பட்ட முறையில் பழகியிருக்கிறேன். சமுதாயத்தின் மேல் மிகுந்த கோபமாக இருக்கக்கூடியவர். எந்தளவு வெளியே தன்னை அமைதியாக காட்டிக்கொள்கிறாரோ, அதற்கு நேர்மாறாக நான் பார்த்த வகையில் சமூகத்தின் மீது கோபமாக உள்ளவர். அரசியலைப் பொறுத்தவரை யார் வருகிறார் என்பதும், மக்கள் யார் சொன்னால் கேட்பார்கள் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்” என தெரிவித்தார்.
சினிமாவை விட்டு விலகுவேன்
தொடர்ந்து அவரிடம், “விஜய் அரசியலுக்கு வந்தபோது ஜனநாயகன் தான் என்னுடைய கடைசி திரைப்படம், இனிமேல் நடிக்க மாட்டேன் என சொன்னார். நீங்கள் எம்.எல்.ஏ.,வாகி விட்டால் நாங்கள் என்ன செய்வது?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர்.சி, “மதுரை மத்தி தொகுதிக்கு ஆலோசகராக வரலாம் என கூறிய அவர், நான் ஜெயித்தால் முழுநேரமாக மதுரை மத்தி எம்.எல்.ஏ.,வாக தான் என் வாழ்க்கை இருக்கும். சினிமாவில் இருந்து விலகுவேன். மூக்குத்தி அம்மன் 2 படம் முடிந்து விட்டது. புருஷன் படம் பாதி எடுக்க வேண்டியுள்ளது. அரசியல் என்பது பகுதி நேர வேலை கிடையாது. என்னுடைய தேவைகள் ரொம்ப கம்மி. மற்றவர்களை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















