Karuppu Audio Launch: ஷூட்டிங்கில் நடந்த சண்டை.. கருப்பு ரிலீஸ் தேதி மாற்றமா? - ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்த தகவல்!
கருப்பு பட ஷூட்டிங்கின்போது எனக்கும் எஸ்.ஆர். பிரபுவுக்கும் சண்டை, விவாதம் என எல்லாமே நடந்தது. ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம் என இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

கருப்பு படத்தில் சூர்யா இல்லாத நிறைய காட்சிகள் இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயமாக அமைந்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கருப்பு. த்ரிஷா, ஷிவதா, சுவாசிகா, நட்டி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படமானது மே 14ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “என்னைப் பொறுத்தவரை சூர்யாவை திரையில் மகிழ்ச்சியாக, ஜாலியாக இருக்க வைக்க வேண்டும். அதே சமயம் ஒரு மாஸ் ஹீரோவாகவும் தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக, பெரிய ஹீரோ படங்களில் ஹீரோ எல்லா காட்சிகளிலும் இருப்பார். ஆனால் கருப்பு படத்தில் அவர் இல்லாத நிறைய காட்சிகள் உள்ளன. ஆனால் அவர் அதற்குச் சம்மதித்து அதைச் செய்து கொடுத்தார்.
திரையில், அவருடைய கண்களே பெரிதாகப் பேசுகின்றன. படத்தைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஒரு கமர்ஷியலான முதல் பாதி, மற்றும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு உற்சாகப்படுத்தக்கூடிய இரண்டாம் பாதியாக கருப்பு இருக்கும். சொல்லப்போனால் ஒரு அரசன் தன் சிம்மாசனத்திற்காக வருகிறான் என கூறலாம்.
மேலும் வலிமை அப்டேட்டிற்குப் பிறகு கருப்பு அப்டேட்தான் அதிகம் கேட்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஆனால் முதல் அடி எப்போதும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு தான் இருக்கிறது. ரசிகர்கள் அப்டேட் கொடுக்காததால் அவரைக் குறிவைத்துள்ளனர். கருப்பு பட ஷூட்டிங்கின்போது எனக்கும் எஸ்.ஆர். பிரபுவுக்கும் சண்டை, விவாதம் என எல்லாமே நடந்தது. ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்தது. அவர்கள் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து எனக்கு எல்லாவிதமான ஆதரவையும் கொடுத்தார்கள். நானும் இந்தப் படத்திற்காக 100% உண்மையாக உழைத்தேன்.
ஹீரோயினாக நடித்துள்ள த்ரிஷா இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். த்ரிஷாவாக 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. இது சமீப காலங்களில் அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும். ஒரு பெரிய படத்தை எப்படி கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் சாய் அபியங்கரை ஒப்பந்தம் செய்தபோது, கருப்புதான் அவருடைய முதல் படம். இப்போது அவர் 73 படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளார். நான் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன், அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்றுகொண்டிருந்தது. அவர் ஒரு திறமையான இசையமைப்பாளர், நாங்கள் அவரை எங்கள் தலைசிறந்த படைப்பாகக் கொண்டு வந்துள்ளோம்.
அதேபோல் கருப்பு பட போஸ்டர்களில் ஏன் தேதி போடவில்லை என்று ரசிகர்கள் கேட்கிறார்கள், ஆனால் செய்தால் சென்சார் போர்டு ஒரு குத்து குத்தி விடுகிறார். சீக்கிரம் தேதி போடுவோம். பட்டாசு எடுத்து வைங்க.. மே 14 பண்டிகை வர போகுது” என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















