திண்டாடும் திரையரங்குகள்...ஒரே படத்தை மீண்டும் மீண்டும் வெளியிட வேண்டிய கட்டாயம்
3 Rerelease : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது

ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு குறிப்பிட்ட திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆன 3 திரைப்படம் மறுபடியும் காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பழைய படங்கள் ரீரிலீஸில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் புதிய படங்கள் எதுவும் இல்லாத கவலைக்கிடமான நிலையில் தான் தமிழ் சினிமா உள்ளது என்பதே இதன் மூலம் தெரியவரும் நிதர்சனம்
விஜயின் கில்லி , ரஜினியின் படையப்பா தற்போது அஜித்தின் மங்காத்தா என அடுத்தடுத்து நட்சத்திரங்களின் பழைய படங்கள் மீண்டும் வெளியிடப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் தமிழ் திரையரங்குகளில் ரீரிலிஸ் கலாச்சாரம் பெரியளவில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தனுஷின் 3 திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்காக புதுப்பிக்கப்பட்ட டிரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது.
3 ரீரிலீஸ்
தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக அறியப்படும் அனிருத் இந்த படத்தின் மூலமாகதான் தனது இசைப் பயணத்தை தொடங்கினார். தனுஷ் நாயகனாக நடிக்க ஸ்ருதி ஹாசன் அவருக்கு ஜோடியாக நடித்தார். சிவகார்த்திகேயன் சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். வை திஸ் கொலவெறி என்கிற பாடல் முழுவதும் வைரலாக 3 படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு பெருகியது. ஆனால் எதிர்பார்த்ததைப் போல படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்பெறவில்லை. ஆனால் ரசிகர்கள் மனதிற்கு மிக நெருக்கமான படமாக 3 எப்போதும் இருந்து வருகிறது . பள்ளி பருவத்து காதல் காட்சிகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி 3 திரைப்படம் ரீரிலீஸ் ஆக இருக்கிறது.
கவலைக்கிடமான நிலையில் தமிழ் திரையரங்குகள்
ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் பெரியளவில் வரவேற்பு கொடுத்தாலும் இதற்கு பின்னால் ஒரு கசப்பான உண்மை இருப்பதை நாம் அனைவரும் அறிவோம் . கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 , தக் லைஃப் , கூலி போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த ஆண்டு வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. சூர்யாவின் கருப்பு படம் நிலுவையில் இருந்து வருகிறது. ஒரு சில படங்களை தவிர்த்து சிறிய பட்ஜெட் படங்களுக்கு மக்கள் ஆதரவு தருவதில்லை. இதனால் திரையரங்குகளை நிர்வகிக்க அவற்றின் உரிமையாலர் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். இதனால் திரையரங்குகள் சூப்பர்ஹிட் ஆன படங்களை மறுபடியும் திரையரங்குகளில் வெளியிட தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு தொடக்கம் சுமார் என்றாலும் அடுத்தடுத்து வரும் படங்கள் நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.






















