TVK Vijay: விஜயை புகழ்ந்தது குத்தமா?.. பாடகர் வேல்முருகன் மீது போலீசில் புகார்!
முருகனுக்குரிய மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலின் வரிகளை மாற்றி பாடகர் வேல்முருகன் தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜயை புகழ்ந்து பாடினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதன் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் குற்றாலநாதன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டு அக்கட்சி தலைவர் விஜய்யை புகழ்ந்து பாடினார்.
அப்போது முருகனுக்குரிய மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலை அவர் வரிகளை மாற்றி விஜயை புகழ்ந்து பாடினார். இதனால் தமிழ் கடவுள் முருகன் இழிவுப்படுத்தப்பட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் கண்டு வேதனையடைந்தேன். இந்த நிகழ்வு ஒரு முருகப் பக்தராக எனக்கு மிகுந்த வேதனை அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மத மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாற்று மதத்தைச் சேர்ந்த தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தூண்டுதல் பேரில் வேல்முருகன் பக்தி பாடலை மாற்றி பாடியுள்ளார்.
எனவே வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்ட பாடகர் வேல்முருகன் மீதும், அதற்கு காரணமான விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி முதல்முறையாக 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா நேற்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடந்தது.
அதில் பாடல் பாடிய வேல்முருகன்,
“வருவாய் எங்கள் தளபதியே..
வருவாய் எங்கள் வெற்றிக் கழகமே..
பரமனின் திருமகனே.. எங்கள் அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனது முகம்.. அது ஆறுமுகம்..
காலமெல்லாம் காண்பதெல்லாம் உனது பலம்..
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் எங்கள் தளபதியே” என பாடல் பாடினார். முருகன் பாடலை மாற்றி பாடிய நிலையில் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதேசமயம் பக்தி பாடலை அரசியலுக்காக இப்படி மாற்றி பாடியதாக சிலர் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பாடகர் வேல்முருகனுக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.























