Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
நான் அமெரிக்காவில் படித்து செட்டிலாகி குழந்தைகள் பெற்று அவர்கள் கல்லூரி போன பிறகு இந்தியா திரும்பி ஒரு வீடு வாங்கி செட்டிலாக வேண்டும் என கனவுடன் இருந்தேன் என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

சினிமாவை விட்டு என்னால் போக முடியவும் முடியவில்லை, பெரிய வெற்றியையும் பார்க்கவில்லை என நடிகை ஐஸ்வர்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவர், “என் அம்மா லட்சுமி மிகப்பெரிய பிரபலமாக இருந்தபோதும் நான் நடிகையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை. எனக்கு அந்த முக லட்சணம் இல்லை என சொல்வார்கள். நான் நன்றாக படிப்பேன். அம்மா கேமரா முன்னால் படும் கஷ்டத்தைப் பார்த்திருக்கிறேன். என்னை டிஸ்னி படங்கள் பார்க்க தான் அவர் அனுமதித்தார். சினிமாத்துறை எப்படி, நடிகைகளை என்னவெல்லாம் சொல்வார்கள் என்பதையும் நான் அறிந்து வைத்திருந்தேன். அதனால் எனக்கு விருப்பமே இல்லாமல் இருந்தது.
கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டேன்
நான் டாக்டர் ஆவேன் என நினைத்தார்கள். ஆனால் எலியைப் பார்த்து பயந்து மயங்கியதால் வேறு ஏதாவது படிக்க வையுங்கள் என பேமிலி டாக்டர் அட்வைஸ் பண்ணினார். சரி மருத்துவம் சார்ந்த ஊட்டச்சத்து நிபுணருக்கு படிக்கலாம் என சேர்ந்தேன்.
என்னுடைய போதாத நேரம் நான் கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன். நான் அதை வேண்டுமென்றே செய்யவில்லை. தாமிரமும் சல்பூரிக் அமிலமும் சேர்ந்து காப்பர் சல்பேட் உப்பை உருவாக்க வேண்டும். இதற்காக இரண்டையும் சூடாக்கும்போது அது வெடித்து விட்டது. பக்கத்தில் இருக்கும் மாணவி பயத்தில் கத்தி அவளுடையதை தட்டி விட மொத்தமாக அந்த ஆய்வகம் தீப்பிடித்து விட்டது. அதனால் பள்ளி முதல்வர் இந்த துறையே வேண்டாம் என கூறினார். இதனால் நான் பொலிடிக்கல் சயின்ஸ் பிரிவை எடுத்து சட்டம் படிக்க முடிவு செய்தேன்.
பெரிய வெற்றியைப் பார்க்க முடியல
கல்லூரிக்கு விண்ணப்பித்த அத்தனை இடங்களிலும் சீட் கிடைத்தது. அப்போது மாதுரி தீட்சித் நடித்த ஏக் தோ தீன் பாடலுக்கு நான் நடனமாடினேன். அப்போது வீட்டில் இயக்குநர் சிவச்சந்திரனுக்கு ஆடிக் காட்டி விட்டேன். அப்படத்தின் ஆடிஷனுக்கான வசனத்தை நான் கேட்டு கேட்டு மனப்பாடம் செய்து அவருக்கு நடித்து காட்டினேன். எங்க அம்மாவுக்கு நடிப்பு வரவில்லை என நான் சொன்னதும் அவர் என்னை நடித்துக் காட்ட சொன்னார்.
நான் நடித்ததும் சிவசந்திரன் ஓகே சொன்னார். நான் அமெரிக்காவில் படித்து செட்டிலாகி குழந்தைகள் பெற்று அவர்கள் கல்லூரி போன பிறகு இந்தியா திரும்பி ஒரு வீடு வாங்கி செட்டிலாக வேண்டும் என கனவுடன் இருந்தேன். கடைசியில் ஒரு படம் நடிக்க சொல்லி அவர் கேட்க, நானும் ஓகே சொல்ல இன்று வரை அதுதான் பிழைப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்னால் போகவும் முடியவில்லை, பெரிய வெற்றியைப் பார்க்க முடியவில்லை என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















