அஜித் படத்தை தயாரிப்பேன்..சிவகார்த்திகேயன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்
அஜித் வைத்து படம் தயாரிப்பீர்களா என்கிற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த பதில் வைரலாகி வருகிறது

எதிர்காலத்தில் தனது தயாரிப்பு நிறுவனம் பெரிய நிறுவனமாக வளர்ந்தால் அஜித் குமார் விருப்பம் தெரிவித்தால் நிச்சயம் அஜித் குமார் நடிக்கும் படத்தை தயாரிப்பேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 14 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த 14 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் இளம் தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகிறார். தனது நண்பரான அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் கனா திரைப்படத்தை தயாரித்தார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு , வாழ் , டாக்டர் , டான் , குரங்கு பெடல் , கொட்டுக்காளி ஆகிய படங்களை தயாரித்தார். இதில் டாக்டர் மற்றும் டான் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றன. சூடி நடித்த கொட்டுக்காளி திரைப்படத்தை வெளியிட்டதற்காக சிவகார்த்திகேயன் கடும் விமர்சனங்களை சந்தித்தார். தற்போது ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படத்தை தயாரித்துள்ளார். பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
மதுரையில் தாய்கிழவி படக்குழு
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் தாய்கிழவி படத்தை இயக்கியுள்ளார். ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க , அருள்தாஸ் , சிங்கம் புலி , பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை காண படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் , இயக்குநர் மற்றும் நடிகர்கள் இன்று மதுரை சென்றனர். படம் பார்த்து முடித்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது அஜித் வைத்து படம் தயாரிப்பீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பினர் பத்திரிகையாளர்
அஜித் வைத்து படம் தயாரிப்பது குறித்து சிவகார்த்திகேயன்
" தற்போது நான் ஒரு குட்டி கம்பேனி வைத்து சின்ன படங்களை தயாரித்து வருகிறேன். எதிர்காலத்தில் பெரிய தயாரிப்பு நிறுவனமாக வளர்கையில் அஜித் சார் விருப்பப்பட்டால் நிச்சயம் அவரை வைத்து படம் தயாரிப்பேன். அவருடைய ரசிகர்களுக்கு ஒரு திருவிழா மாதிரியான படமாக அந்த படம் இருக்கும். ஆனால் தற்போதைக்கு எனக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்து என்னால் முடிந்த சின்ன படங்களை தயாரித்து வருகிறேன். " என்று சிவகார்த்திகேயன் கூறினார்























