Rajinikanth: ஸ்டாலின் தோற்றது வருத்தம்.. விஜய் ஜெயித்ததில் பொறாமையா? - ரஜினிகாந்த் கொடுத்த பதில்!
எனக்கும் விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஒப்பிட்டால் அது தவறானது.எனக்கு விஜய் மேல பொறாமை என சொல்கிறார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது தனக்கு வருத்தம் தான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் எதிர்பாராதவிதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். இந்த நிலையில் விஜய் முதலமைச்சராக சிறிது கால தாமதமானது. இதற்கிடையில் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்ததாகவும், இதன்பின்னணியில் ரஜினிகாந்த் இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதேபோல் விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜயை பற்றிய கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளிக்காமல் சென்றார்.
இதனால் ரஜினிக்கு விஜய் முதலமைச்சரானதில் பொறாமை என்றெல்லாம் கிளப்பி விடப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நான் மு.க.ஸ்டாலினை போய் பார்த்ததை விமர்சித்தார்கள். அவர் எனக்கு 40 ஆண்டுகால நண்பர். அரசியலுக்கு அப்பாற்ப்பட்டது எங்கள் நட்பு. ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான். மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றது எனக்கு வருத்தம் தான். ஆனால் விஜய் முதலமைச்சர் ஆவதை நான் தடுத்தாக சொன்னார்கள். இரு பெரும் கட்சி கூட்டணி அமைக்க நான் பேசியதாக கூறினார்கள். அப்படி பேசும் தரம் கெட்ட ஆள் நான் இல்லை. விஜய் ஜெயித்தவுடன் என்னோட வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
அதனை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் விமான நிலையத்திற்கு சென்றபோது செய்தியாளர் என சொல்லிக் கொண்ட ஒருவர் திடீரென செல்போனை நீட்டி விஜய் முதலமைச்சராவது பற்றி கேட்டார். நான் அதிர்ச்சியாகி பேசாமல் சென்று விட்டேன். அதற்கும் என்னை விமர்சித்தார்கள். மேலும் எனக்கு விஜய் மேல பொறாமை என சொல்கிறார்கள். நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன். அப்படி இருக்கும்போது எனக்கு ஏன் பொறாமை வர வேண்டும். ஒருவேளை கமல்ஹாசன் முதலமைச்சராகி இருந்தால் கூட பொறாமை வந்திருக்குமா என கேட்டால் தெரியாது.
எனக்கும் விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஒப்பிட்டால் அது தவறானது. விஜயை சிறுவயதில் இருந்து பார்த்திருக்கிறேன். எம்ஜிஆர், என்.டி.ஆரை விட விஜய் தனியாளாக ஜெயித்துள்ளார். அதில் எனக்கு ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோசம் தான் உண்டானது. மத்தியில் பாஜக, தமிழ்நாட்டில் இரு பெரிய கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார். விஜய் மீது மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
என்னுடைய ரசிகர்கள் வருத்தப்படுவதைப் பற்றி சொன்னார்கள். நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என 3 பக்க அறிக்கையில் தெளிவாக சொல்லிவிட்டேன். அதன்பிறகு திரும்ப திரும்ப கேட்கிறார்கள். நான் அரசியலுக்கு வராத ஆதங்கம் இருக்கும் என்பது எனக்கு புரிகிறது. சினிமா வேறு, அரசியல் வேறு. என்னோட ரசிகர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்கிறீர்களோ தாராளமாக செய்யுங்கள் என சொல்லிவிட்டேன்” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















