பார்த்து இருங்க.. போன் செய்து எச்சரித்த பெண் ரசிகை.. மரணம் வரை சென்ற ஜெகபதி பாபு!
ஜகபதி படத்தின் படப்பிடிப்பின்போது நான் மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தேன். அன்று காலையில் எனக்கு ஒரு பெண் ரசிகை போன் செய்து கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்தார் என ஜெகபதி பாபு தெரிவித்துள்ளார்.

பிரபல தென்னிந்திய நடிகர் ஜெகபதி பாபு மரணத்தின் விளிம்பிலிருந்து தான் தப்பிய கதையை நேர்காணல் ஒன்றில் இருந்து தெரிவித்துள்ளார்.
சாவை நேரில் பார்த்த ஜெகபதி பாபு
நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், “எனக்கு பெண்களை மிகவும் பிடிக்கும். நான் அவர்களை மிகவும் மதிக்கிறேன்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “விதி, ஜோதிடத்தில் இருக்கும் நம்பிக்கை ஆகியவை குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார். அப்போது சினிமா ஷூட்டிங்கில் தான் மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்ததைப் பற்றி தெரிவித்தார்.
ஜகபதி படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜகபதி பாபு, ரக்ஷிதா மற்றும் நவ்நீத் கவுர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜகபதி பாபு ஒரு ஊழல் நிறைந்த ரவுடி போலீஸ்காரராக நடித்திருப்பார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் என்னை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி குழிக்குள் புதைத்து அதன் மேல் மூடி போட்டு ஆணியடிக்கும்படி காட்சி அமைந்தது. அந்தக் காட்சி உண்மையாகவே என்னால் செய்யப்பட்டது. எந்தவித டூப்பும் பயன்படுத்தப்படவில்லை.
அந்த பெட்டியில் மூச்சுவிடுவதற்கு கூட எந்த இடைவெளியும் இல்லை. காட்சி ஓகே ஆனதும் உடனடியாக என்னை வெளியே எடுக்க வேண்டும் என திட்டமிட்டப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட 32 வினாடிகள் அதிகமாக எடுத்த நிலையில் நான் பெட்டிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவே இழந்தேன். மூடியை அகற்றியபிறகு நான் இருந்த நிலையைக் கண்டு பலரும் நான் இறந்து விட்டேன் என நினைத்தார்கள். என்னை வெளியே இழுத்துப்போட்டு சிலர் அழுதுக் கொண்டிருந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் நான் மீண்டு விட்டேன்.
எச்சரித்த பெண் ரசிகை
இந்த காட்சியானது மதிய நேரத்தில் நடந்தது. ஆனால் அன்று காலையில் எனக்கு ஒரு பெண் ரசிகையிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. தன்னை ஒரு ஜோதிடர் என சொல்லிக்கொண்ட அப்பெண், நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என கேட்டார். நீங்கள் மரணத்தின் விளிம்பில் இருப்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தினாள். அது நியாபகம் வந்து அந்த பெண்ணை மீண்டும் அழைத்து ஏன் காலையில் அப்படி கேட்டாய் என கேட்டேன். அதற்கு அந்த பெண் ரசிகை, “நீ மரணத்தின் விளிம்பில் இருக்கிறாய் என்றும், நீ இறந்து விடுவாயோ என்று பயந்து காலையில் அழைத்தேன்” எனவும் சொன்னார். இதை அந்த பெண் முன்கூட்டியே சொல்லியிருந்தால் நிச்சயம் நான் எச்சரிக்கையுடன் இருந்திருப்பேன் எனவும், அதனால்தான் நான் ஜோதிடத்தை நம்புகிறேன் என்றும் ஜெகபதி பாபு தெரிவித்துள்ளார்.























