NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
பூதாகரமாகும் பிரச்சினை; நீட் உள்ளிட்ட மத்திய அரசு நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 47 என்.டி.ஏ அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதோடு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 47 என்.டி.ஏ அதிகாரிகளை மத்திய அரசு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பான சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், தேசியத் தேர்வு முகமையின் 47 அதிகாரிகளை மத்திய அரசு அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், மோசடிகளைத் தடுப்பதற்கான சட்டங்களையும் மத்திய அரசு தற்போது தீவிரமாகக் கடுமையாக்கியுள்ளது.
தொடரும் சர்ச்சைகள்
தேசியத் தேர்வுகள் முகமை நடத்தும் முக்கிய நுழைவுத் தேர்வுகளில் சமீபகாலமாகத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதனால் தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இது நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் உள்ளிட்ட மாணவர்கள் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளன. இது ஆளும் பாஜக அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
கல்வித்துறையில் பெரும் பரபரப்பு
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, தேர்வுகளைச் சரியாக நடத்தத் தவறியது, கடமை தவறியது மற்றும் முறைகேடுகளுக்குத் துணைபோனது ஆகிய புகார்களின் அடிப்படையில், என்.டி.ஏ அமைப்பைச் சேர்ந்த 47 அதிகாரிகள் கூண்டோடு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டங்களும் கடுமையாக்கம்
அதிகாரிகளின் பணிநீக்க நடவடிக்கை மட்டுமின்றி, இனி வரும் காலங்களில் வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் துளியும் நடைபெறாமல் இருக்க, தேர்வு முறைகேட்டுத் தடுப்புச் சட்டங்களும் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கசிவில் ஈடுபடும் தனிநபர்கள், இடைத்தரகர்கள், மோசடி கும்பல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் தேர்வு மைய நிர்வாகத்தினர் மீது மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய புதிய சட்டம் தெளிவான வழிவகை செய்கிறது.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் வகையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அதிவிரைவு நீதிமன்றம் மூலம் விரைவாக இதுதொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதி வழங்கப்பட உள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது.
மாஃபியாக்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி?
கல்வி அமைப்பின் மீதான மாணவர்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில், தேசியத் தேர்வு முகமையின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பிலும் மாபெரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. தற்போதைய 47 அதிகாரிகளின் அதிரடிப் பணிநீக்கம் மற்றும் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள கடுமையான சட்டங்கள் மூலம், நாடு முழுவதும் செயல்படும் வினாத்தாள் கசிவு மாஃபியாக்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























