Anbumani: அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்க; விஜய் கனவு நிறைவேறும்: அன்புமணி வேண்டுகோள்
விஜய்யினுடைய நோக்கம் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான்.. திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு நீங்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்- அன்புமணி

தமிழ்நாட்டில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற விஜய் ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் விஜயின் கனவு நிறைவேறும் என்று பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
விஜயின் ஆதரவாளர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்
அப்போது பேசிய அன்புமணி, ‘’இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் அதிக வாக்குகளை வாங்குவார், ஆனால் வெற்றி பெற முடியாது. எனவே உங்கள் வாக்குகள் வீணாக்கப்பட வேண்டாம். விஜய்யினுடைய நோக்கம் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான்.. திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு நீங்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
விஜய் ரசிகர்கள் விஜய்க்குதான் ஓட்டு போடுவார்கள், அவர்களை நான் கேட்கவில்லை. விஜயின் ஆதரவாளர்களுக்கு நான் சொல்கிறேன். உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் உங்கள் தலைவரின் விஜய்யின் கனவு நிறைவேறும், திமுக ஆட்சி அகற்றப்படும்.
2016-ல் நான், 2026-ல் விஜய்
2016-ல் ’மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்று நான் தனியாக நின்ற போது மக்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால் அன்புமணியால் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்பதால் பலர் அதிமுகவிற்கு வாக்களித்தார்கள். அதனால் திமுக தோற்றது. அதே சூழல்தான் எப்போதும் இருக்கிறது.
விஜயின் ஆதரவாளர்களுக்கு நான் கேட்டுக்கொள்கிறேன் உங்களை நோக்கம் நிறைவேற வேண்டுமானால் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். எதிர்க் கட்சியாகக்கூட திமுக வரக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
விஜயகாந்தின் ஆன்மா கூட மன்னிக்காது
விஜயகாந்த் தன்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை திமுகவை எதிர்த்துக் கொண்டுதான் இருந்தார். இன்று கிராமங்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள். விஜயகாந்தின் ஆன்மா கூட இதனை மன்னிக்காது. அவருடைய எதிரி திமுகவுடன் சென்று கூட்டணி வைத்ததை அவர் ஏற்க மாட்டார். இதை அவரது கட்சிக்காரர்களே ஏற்கவில்லை’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















