![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
அமைச்சர் டிஆர்பி ராஜா காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
சோதனை செய்த நேரத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா அங்கு இல்லாத நிலையில், காரின் பின்புற கதவை திறந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
![அமைச்சர் டிஆர்பி ராஜா காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை Lok Sabha Election 2024 Election Flying Squad Officers check Minister Trb Raja car in Coimbatore - TNN அமைச்சர் டிஆர்பி ராஜா காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/30/25c854ac531da921b12f1926e1bfa03d1711780513878188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கோவையில் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை செய்ய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரது வீட்டிற்கு டிஆர்பி ராஜா சென்றார். அப்போது அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு சாலையில் நின்றிருந்த அவரது காரில், அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனை செய்த நேரத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா அங்கு இல்லாத நிலையில், காரின் பின்புற கதவை திறந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரிப்பு
பின்னர் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கவுண்டம்பாளையம் பகுதியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பரப்புரை மேற்கொண்டார். அப்போது கட்சியினர் அவருக்கு ரோஜா மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு, அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் முன்னே செல்ல, அதன் தொடர்ச்சியாக மாட்டு வண்டியில் பயணம் செய்தவாறே அமைச்சர் டிஆர்பி ராஜா பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி வடமாநிலத்தவர்கள் அமைச்சருக்கு டர்பன் அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று காலை சூலூர் ஒன்றிய பகுதிகளான குளத்தூர், வெங்கிடாபுரம், சின்னியம்பாளையம், கரையாம்பாளையம், நீலாம்பூர், முதலிபாளையம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் வெங்கிடாபுரம் பகுதியில் பேசும்போது, ”திமுக ஆட்சியில் மகளிருக்கு உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் சொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் செய்து வருகிறார்.
அதிமுகவின் பிரதம வேட்பாளர் யார்?
திமுக அரசு என்றுமே பெண்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் மணிப்பூரில் பெண்கள் நடமாட முடியாத சூழல் உள்ளது. இதனையெல்லாம் பாஜக அரசு சிந்தித்து கூட பார்க்கவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் இதே நிலைதான் ஏற்படும். பெட்ரோல் விலை குறைக்கப்படும் எனவும், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடப்படும் எனவும் பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்தது. ஆனால் அவர்கள் சொன்னதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. கோவை விமான நிலையம் விரிவாக்கத்துக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். விரிவாக்கம் செய்தால் நிறைய தொழிற்சாலைகள் வரும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் இதனை பற்றியெல்லாம் பாஜக கண்டு கொள்வதில்லை.
அம்பானி வீட்டு திருமணத்திற்காக 10 நாளில் சர்வதேச விமான நிலையம் அங்கீகாரம் கொடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் கோவையை சர்வதேச விமான நிலையமாக செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். அதிமுகவின் பிரதம வேட்பாளர் யார்? என்று தெரியாமலேயே போட்டியிடுகின்றனர். பாஜகவை சமாதானப்படுத்த தேர்தலில் நிற்கின்றனர். பாஜக தமிழ்நாட்டில் நுழைய முடியாது. அதிமுக அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து பாஜகவுக்கு பயந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். பாஜகவின் பினாமி கட்சிதான் அதிமுக. அந்த கட்சிக்கு போடுகின்ற ஓட்டு நோட்டாவுக்கு சமம். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் இந்திய கூட்டணிதான் வெல்லும்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)