Erode By-Election: திடீர் ட்விஸ்ட்! தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மீண்டும் பரபரப்பு!
பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பெங்களூரை சேர்ந்தவரின் வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில் தேர்தல் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அதிகாரி மணிஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், திமுக 125 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டார்.
ஆனால், எதிர்பாராத விதமாக, உடல்நலக்குறைவால் அவர் திடீரென காலமானார். இதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் அவரும் காலமானார். இதனால் 5 ஆண்டுகளுக்குள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இரண்டாவது முறையாக, இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
தேர்தல் அதிகாரி மாற்றம்:
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக இருந்த மணிஷ் மாற்றம் செய்யப்பட்டு, ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த பத்மாவதி என்பவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டு சர்ச்சையான நிலையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விலகிய பாஜக, அதிமுக:
இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம் என்று தெரிவித்தார். இதனால் இந்த தேர்தலில் பிரதான கட்சியான திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகிறது.
திமுக, நாதக போட்டி:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திமுக போட்டியிட காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது. திமுக சார்பில் தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதா லட்சுமி ஆகியோர் போட்டியிட உள்ளார்.
வேட்புமனு தாக்கல்:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கியது, ஆனால், பொங்கல் அரசு விடுமுறை அனைத்தையும் கருத்தில் கொண்டால், வெறும் 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இருந்த நிலையில் 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பரிசீலனைக்கு பின்னர் 46 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விடுமுறை:
தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகள்:
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் - 10.01.2025
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - 17.01.2025
வேப்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - 20.01.2025
வாக்குப்பதிவு - 05.02.2025
வாக்கு எண்ணிக்கை - 08.02.2025
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

