Sasikala: இபிஎஸ் முதல்வராக இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த சசிகலா.. 2017ல் நடந்தது என்ன?
நான் எடப்பாடி பழனிசாமியை என்ன மாதிரியான சூழலில் முதலமைச்சராக தேர்வு செய்தேன் என்பது அவருக்கு தெரியும். செங்கோட்டையன் இருக்கும்போது நான் அவரை தேர்வு செய்ய இதுதான் காரணம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்ய என்ன காரணம் என்பதை வி.கே.சசிகலா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிகழ்ந்த மாற்றம்
2016ம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி அமைந்த நிலையில் அந்தாண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காலமானார். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்தார். இதற்கிடையில் 2017 பிப்ரவரியில் சசிகலாவை முதலமைச்சராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேசமயம் சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நிற்க, அவருக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
சசிகலா சிறை சென்ற பிறகு காட்சிகள் மாறின. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினர். நான்கரை ஆண்டுகாலம் இரண்டு பேரின் தலைமையின் கீழ் அதிமுக ஆட்சி நடந்தது. ஆனால் 2022ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கட்சியை விட்டு நீக்கினார். 3 ஆண்டுகாலம் சட்டப்போராட்டம், பல வகைகளில் கோரிக்கை விடுத்தும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை மீண்டும் இபிஎஸ் கட்சியில் சேர்க்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய, சசிகலா புதிதாக கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சசிகலா கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
எம்ஜிஆர் பாணியில் சசிகலா
சிறையில் இருந்து வந்த பிறகு 5 ஆண்டுகள் கழித்து கட்சி தொடங்க பொறுமை தான் காரணம். ஏனென்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பாணி அதுதான். எதையும் அவசரமாக செய்யக்கூடாது என நினைக்கும் அவரின் தாக்கம் என்னிடம் உள்ளது. அதனால் பொறுமை காக்கும் முடிவை எடுத்தேன். பெங்களூரு சிறைவாசம் முடிந்து சென்னை திரும்ப 21 மணி நேரம் எடுத்துக்கொண்டது. அப்போது கிடைத்த வரவேற்பை கணக்கில் கொண்டு அவசரமாக முடிவெடுக்க விரும்பவில்லை. அப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் சூட்டோடு சூடாக அரசியல் களத்திற்கு வர வேண்டும் என எல்லோரும் நினைப்பார்கள். இருந்தாலும் நான் அப்படி நினைக்கவில்லை. நான் யோசித்து எது செய்தாலும் சரியாக செய்வேன் என நினைக்கிறேன்.
இடைப்பட்ட காலத்தில் பிரித்து கிடந்த அதிமுகவினர் ஒன்றிணைந்து விடுவார்கள் என எந்த நம்பிக்கையில் சொல்லி வந்தீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இதே போன்ற நிலை எம்ஜிஆர் மறைவுக்கு பின்னாலும் அதிமுகவில் இருந்தது. அந்த காலத்திலேயே அதனை சரி செய்தோம் இப்போதும் செய்ய முடியும் என நினைத்தேன். இது ஒரு காரணமாகும். மற்றொரு காரணம் தனக்கு எல்லாம் வேண்டும் என தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் நினைக்கக் கூடாது. அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட என்னை போல் எல்லோரும் இருப்பார்கள் என நினைத்து விட்டேன்.
அதேபோல் அதிமுக அறிவித்துள்ள ரூ.10 ஆயிரம் தேர்தல் வாக்குறுதி, எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு ஒரு வாரம் முன்பே எனக்கு தெரியும். அது நான் 24ம் தேதி நடத்தும் பொதுக்கூட்டம் நடத்தும் அன்று தான் வரப்போகிறது என்பதும் எனக்கு தெரியும்.
இபிஎஸ் முதல்வராக தேர்வு செய்ய இதுதான் காரணம்
நான் எடப்பாடி பழனிசாமியை என்ன மாதிரியான சூழலில் முதலமைச்சராக தேர்வு செய்தேன். அவரை தேர்வு செய்ய முதல் காரணம் இபிஎஸ் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே தெற்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பு கொடுத்திருந்ததால் மேற்கு சார்ந்த நபராக இருக்கட்டும் என நினைத்தேன். அப்போது செங்கோட்டையனும் இருந்தாலும், ஒவ்வொருவரும் எப்படி செயல்படுவார்கள் என்பது தெரியும். அதனால் இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமி இருக்கட்டும் என நினைத்து பெங்களூரு புறப்பட்டு சென்றேன்.
அதன்பிறகு அவரிடம் நிறைய மாற்றம் செய்தேன். இருக்குமிடத்தில் தெரிந்து கொள்ளும் அளவுக்கு நான் புரிந்துக் கொண்டேன். கர்நாடகா மாநிலத்தில் வேறு அரசு இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருந்தவர்களால், சிறை உள்ளே எனக்கு இருந்த சுதந்திரத்தை வைத்து வெளியில் என்ன நடக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன். என்னோட நெருக்கடிக்கு இபிஎஸ் தான் காரணம். வேறு யாரும் இல்லை என்பது தெரியும்.
சிறையில் இருந்த என்னை ஒருமுறை 5 அமைச்சர்கள் பார்த்து பேசினார்கள். அப்போதே கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. என்னை சென்னைக்கு வந்து விடலாமே என கூறினார்கள். ஆனால் வெளியில் சூழலை புரிந்துக் கொண்ட பிறகு நான் சென்னையை விட பெங்களூருவில் இருந்துக் கொள்கிறேன்.




















