''பாக்யராஜாக மாறிய ஸ்டாலின்'' கல்லைக் காண்பித்து நூதன பிரச்சாரம் செய்த அன்புமணி
'அந்த 7 நாட்கள்' படத்தில் பாக்யராஜ் சுண்டல் விற்பனை செய்யும்போது, முஸ்லீம் பகுதிக்கு சென்றால், குல்லா போடுவார், கிறிஸ்துவராக இருப்பார்- அன்புமணி.

’’தர்மபுரியில் சிப்காட் கொண்டு வருவோம் என்று திமுக சொன்ன இடத்தில் வெறும் கற்கள் மட்டும்தான் உள்ளன. அங்கு எந்த தொழிற்சாலையும் இல்லை’’ என்று கையில் கல்லை எடுத்து காண்பித்து, அன்புமணி ராமதாஸ் வித்தியாசமாக பிரச்சாரம் செய்தார்.
தர்மபுரியின் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அன்புமணி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அன்புமணி,
’’சௌமியா அன்புமணி வெற்றி பெற்றால், தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடி முதல்வராவார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சொற்ப வாக்கு வித்யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். மீண்டும் இந்த நல்ல வேட்பாளரை கொடுத்திருக்கிறோம். நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து, சாதி, மதம், கட்சி பேதமின்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த தொகுதி மட்டுமில்லாமல், மாவட்டமே வளர்ச்சி பெற வாக்களிக்க வேண்டும்.
சௌமியாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்
மக்கள் கொடுங்கோல் திமுகவை, சாராயம் விற்பனை செய்யும், பெண்களுக்கு எதிரான திமுகவை விரட்டியடிக்க வேண்டும். இந்திய நாடு விடுதலை பெற்ற பின், கடந்த 79 ஆண்டுகளில் தருமபுரி தொகுதியில் பெண்கள் சட்டமன்ற உறுப்பினராக வரவில்லை. அதனால் கேட்கிறேன். பெண் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற வைக்க வேண்டும். சௌமியா அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அவர் சட்டமன்றத்திற்கு சென்றால் பெண்கள் பாதுகாப்பை பற்றி தைரியமாக சட்டமன்றத்தில் பேசுவார்.
பாக்யராஜாக மாறிய ஸ்டாலின்
5 ஆண்டுகளாக ஊழல் ஆட்சி செய்த திமுகவை விரட்டியடிக்க வேண்டும். ஸ்டாலினுக்கு ஒரு பழக்கம் உண்டு. 'அந்த 7 நாட்கள்' படத்தில் பாக்யராஜ் சுண்டல் விற்பனை செய்யும்போது, முஸ்லீம் பகுதிக்கு சென்றால், குல்லா போடுவார், கிறிஸ்துவராக இருப்பார்.
அதுபோல ஸ்டாலின், தருமபுரி, விழுப்புரம் சென்றால், வன்னியர்கள் பற்றி பேசுவார். கோவை போனால் தீரன் சின்னமலை பற்றி பேசுவார். அதுதான் திமுக ரத்தத்தில் ஊறியது.
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சொல்கிறார், 'அய்யாவின் வலது கரம் ஜி.கே.மணியாம்', அவரது மகன் தமிழ் குமரனுக்கு கை சின்னத்தில் வாக்களிக்கனுமாம். ஜி.கே.மணி அய்யாவின் வலது கரமில்லை. ஸ்டாலினோட வலது கரம், தமிழ் குமரன் உதயநிதி ஸ்டாலின் வலது கரம். துரோகிகள், அவர்களை பற்றி பேசக்கூடாது.
டெபாசிட் இழக்க செய்யுங்கள்
தருமபுரி மாவட்டத்தை பற்றி ஸ்டாலினுக்கு கவலையில்லை. இந்த மாவட்ட மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். இந்த தேர்தலில் 5 தொகுதிகளிலும் பூஜ்ஜியம்தான் கிடைக்க வேண்டும். நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
தருமபுரி மாவட்ட மக்கள் படிக்கக்கூடாது. குடிக்கனும். இதுதான் ஸ்டாலின் எண்ணம். கடந்த ஓராண்டில் தருமபுரி மாவட்ட மக்கள் ரூ.3000 கோடிக்கு குடித்துள்ளனர். 5 ஆண்டுகளில் ரூ.15,000 கோடிக்கு குடித்துள்ளனர்.
கல்லைக் காட்டி பிரச்சாரம்
தருமபுரியில் சிப்காட் தொடங்கியதாக சொல்கிறார்கள். எந்த தொழிற்சாலையும் இங்கு வரவில்லை. அந்த இடத்தில் கற்கள்தான் இருக்கின்றன. இதோ அங்கு கிடைத்த கல் என்று வெள்ளை நிறத்தில் ஒரு கல்லை எடுத்து காட்டினார்.
ஸ்டாலின் பாஜக பற்றி பேசிப் பார்த்தார் எடுபடல. இது நாடாளுமன்ற தேர்தல் இல்லை. சட்டமன்ற தேர்தல். இது உங்களுக்கும் மோடிக்கும் இல்லை. இபிஎஸ்-க்கும், உங்களுக்கும்தான் போட்டி.
இப்போ திமுக 8000 கூப்பன் பற்றி பேசுகிறார். 5 ஆண்டு சாதனை பற்றி சொல்லவில்லை. இதில் ஏமாந்து விடாதீர்கள். அது கூப்பன் இல்லை. வெறும் காகிதம். ஒரு பட்டியல் இன பெண் கூப்பன் தரவில்லை என்று, தற்கொலை செய்து கொண்டார். அது போலியான கூப்பன்.. அதைக் கண்டு மக்கள் ஏமாந்து விட வேண்டாம். ஒரு வேளை கொடுத்தாலும் திமுகவினருக்கு ரூ.3000 லஞ்சம் கொடுக்க வேண்டும்.
தற்போது தர்மபுரியில திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மணியால் இந்த மாவட்டத்திற்கு ஏதாவது ஒரு நன்மை உண்டா? இந்த மாவட்டத்திற்கு அவர்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலே மொரப்பூர் ரயில் திட்டத்தை கொண்டு வந்தேன். ஒரு கணவாய் திட்டத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.இப்போது 900 கோடி நிதி ஒதுக்கி அந்த பணி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தர்மபுரியில் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தது இந்த அன்புமணி ராமதாஸ் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆனால் அந்த மருத்துவக் கல்லூரியில் இன்று தேவையான அடிப்படை வசதிகள் தேவையான மருத்துவர்கள் கூட இல்லை அந்த அளவிற்கு திமுகவின் ஆட்சிக்கு மோசமாக உள்ளது.
இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கு நீங்கள் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து சௌமியா அன்புமணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















