யாருப்பா நீங்க... சின்ன வயசுல எம்புட்டு பெரிய யோசனை: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
வாக்கிங் ஸ்டிக்கை வைத்து துரத்தினாலும் சுற்றி வந்து துரத்தும் போது முதியவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.

தஞ்சாவூர்: சமூக நோக்கத்தோடும், மூத்த குடிமக்கள் குறித்த அக்கறையோடும் தஞ்சாவூர் மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல அரசு உயர்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் எஸ்.நவீன், எம்.எஸ்.ராஜன் ஆகியோர் உருவாக்கிய டிபெண்டர் ஸ்டிக் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் தேர்ச்சி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளது.
மூத்த குடிமக்களின் நலனின் அக்கறை கொண்டு சமூக விழிப்புணர்வோடு இந்த மாணவர்கள் இந்த டிபெண்டர் ஸ்டிக்கை உருவாக்கி உள்ளனர். அது என்ன டிபெண்டர் ஸ்டிக் அதனால் என்ன பயன். கேள்விகள் எழும்போதுதான் கண்டுபிடிப்புக்கான அர்த்தம் உருவாகும். இந்த டிபெண்டர் ஸ்டிக் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக சப்தம் அதாவது ஒலி பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
சத்தம் அல்லது ஒலியின் அளவை நாம் டெசிபல் (Decibel - dB) என்ற அலகால் அளவிடுகிறோம். மனித செவிகளால் கேட்கக்கூடிய ஒலியின் வரம்பு எவ்வளவு தெரியுங்களா? 20 Hz முதல் 20,000 Hz வரையிலான அதிர்வெண் கொண்ட ஒலியை மட்டுமே கேட்க முடியும். அதற்கு மேல் நம்மால் கேட்க முடியாது.

மீயொலி (அல்ட்ராசோனிக்) (Ultrasonic - அதிக அதிர்வெண்): சில விலங்குகள் மனித செவித்திறனுக்கு அப்பாற்பட்ட மிக அதிக அதிர்வெண் கொண்ட ஒலிகளை உணர்கின்றன. இதன்படி வௌவால்கள் (Bats) 1,00,000Hz (100kHz) வரை கேட்கும் திறன் கொண்டவை. இவை "எக்கோலோகேஷன்" (Echolocation) முறையில் ஒலியை எழுப்பி, அது எதிரொலிப்பதன் மூலம் இருட்டிலும் தடையின்றி பறக்கின்றன. இதனால்தான் எத்தனை இருட்டாக இருந்தாலும் எதன் மீதும் மோதிக் கொள்ளாமல் வௌவால்களால் பறக்க முடிகிறது.
டால்பின்களால் நீருக்கடியில் 1,50,000Hz வரை கேட்கும் திறன் கொண்டவை. நாய்கள் மற்றும் பூனைகளால் கேட்கக்கூடிய ஒலியின் அளவு எவ்வளt[ தெரியுங்களா? நாய்கள் 45,000Hz வரையிலும், பூனைகள் 64,000Hz வரையிலும் கேட்கும். அதனால்தான் மனிதர்களுக்குக் கேட்காத மிக மெல்லிய சத்தத்தைக் கூட இவை எளிதில் உணர்கின்றன. இந்த கருவியின் அடிப்படையே அல்ட்ராசோனிக் சத்தத்தை வைத்துதான் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் முதியவர்கள் காலை, மாலையில் வாக்கிங் செல்கின்றனர். காய்கறிக்கடை, மளிகைக்கடை, பால் பூத் போன்றவற்றிற்கு காலை, மதியம், இரவு நேரங்களில் செல்கின்றனர். இவர்கள் தாங்கள் தடுமாறாமல் செல்ல வேண்டும் என்பதால் வாக்கிங் ஸ்டிக் உபயோகப்படுத்துகின்றனர். இவர்கள் நடந்து செல்லும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் விரட்டி வந்து கடிக்கின்றன. வாக்கிங் ஸ்டிக்கை வைத்து துரத்தினாலும் சுற்றி வந்து துரத்தும் போது முதியவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இவர்களுக்கு இனி பிரச்சினையே இல்ல. அதற்கான தீர்வாகதான் டிபெண்டர் ஸ்டிக்கை (Defender Stick) தஞ்சை மானோஜிப்பட்டி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த டிபெண்டர் ஸ்டிக்கை கண்டுபிடித்தது குறித்து மாணவர்கள் நவீன், ராஜன் ஆகியோர் கூறியதாவது:
இன்று மனிதர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளில் முக்கியமாக சிறுவர்கள், முதியவர்கள், பாதிக்கப்படுவது தெரு நாய்களால்தான். அதிலும் தற்போது தெருநாய்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. முதியவர்கள் காலை நேரத்தில் வாக்கிங் போறாங்க. பின்னர் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைகளுக்கு போறாங்க. அப்போது நாய் துரத்துகின்றன. மேலும் முதியவர்கள் கையில் வாக்கிங் ஸ்டிக் இருப்பதால் கடிக்க வருகின்றன. சில முதியவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் நாய்களும் அவர்களை கடித்து விடுகிறது. தங்களின் பேரன், பேத்திகளுடன் செல்லும் போது அவர்களையும் கடிக்க வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை பார்த்து இதற்கு ஏதேனும் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். இதில் பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர்தான் எளிமையான இந்த டிபெண்டர் ஸ்டிக்கை கண்டுபிடித்தோம்.
இதற்கு எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி, அறிவியல் ஆசிரியர்கள் செந்தில்குமார், ராசாத்தி ஆகியோர் உதவிகள் செய்தனர். அறிவியல் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் படி இந்த டிபெண்டர் ஸ்டிக்கை உருவாக்கி உள்ளோம். நாம் கேட்கக்கூடிய அதிர்வெண் 20Hz லிருந்து 20,000Hz வரைதான். இதற்கு மேல் நம்மாள் ஒலியின் சத்தத்தை கேட்கவோ உணரவோ முடியாது. காரணம் 20,000Hz க்கு மேல செல்லும் சத்தத்திற்கு அல்ட்ராசோனிக் சவுண்ட் (Ultrasonic sound) என்று பெயர். இது நமது காதுக்கு கேட்காது. ஆனா நாய், பூனை போன்ற விலங்குளால் இதை கேட்க முடியும். நாய்களால் விலங்குகளால அத கேட்க முடியும். நாய்கள் 45,000Hz வரையிலும், பூனைகள் 64,000Hz வரையில் அல்ட்ராசோனிக் சவுண்ட்டை உணர முடியும். அதிகப்படியான ப்ரீக்வென்சி (Frequency) உள்ள அல்ட்ராசோனிக் சவுண்ட்டை பயன்படுத்தி நாய்களை எளிமையாக துரத்தி விட்டு விடலாம்.
அல்ட்ராசோனிக் சவுண்ட் நாய்களுக்கு பிடிக்காத ஒன்றாகும். இந்த சத்தத்தை உணரும் நாய்கள் இரிட்டேட் ஆகி ஓடிவிடும். அதனால் முதியவர்கள் பயன்படுத்தும் வாக்கிங் ஸ்டிக்கில் மிகவும் குறைந்த விலையில் அல்ட்ராசோனிக் சவுண்ட்டை ஏற்படுத்த ஒரு சிறிய பாக்சில் NE555 டைமர் ஆஸிலேட்டர், பைசோ பஸ்ஸர், ரெசிஸ்டர், டிரான்சிஸ்டர், கெப்பாசிட்டர், அல்ட்ராசோனிக் சவுண்டை ஆன் செய்ய ஒரு ஸ்விட்ச் என்று அதிகப்பட்சம் ரூ.300லிருந்து ரூ.400க்குள் இந்த கருவியை அமைத்தோம். வாக்கிங் ஸ்டிக் மேற்புறம் ஸ்விட் அமைக்கப்பட்டு இந்த கருவிக்கான பாக்ஸ் கீழ் பகுதியில் இருப்பது போல் செய்தோம். இதனால் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடந்து செல்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாது. நாய்கள் துரத்தினாலோ அல்லது குரைத்தாலே இந்த ஸ்விட்சை ஆன் செய்தால் போதும். அல்ட்ராசோனிக் சவுண்ட் வெளிப்படும். இதை நம்மால் கேட்க முடியாது. ஆனால் நாய்களுக்கு இந்த சத்தம் உணர்ந்து அங்கிருந்து தலைத் தெறிக்க ஓடி விடும். இது முதியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பாதுகாப்பான ஒன்றாகும்.
அதனால் எவ்வித அச்சமும் இன்றி முதியவர்கள் வாக்கிங் செல்வது, கடைகளுக்கு செல்வது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இந்த கண்டுபிடிப்பு புத்தாக்க அறிவியல் போட்டியில் மாவட்ட அளவில் தேர்வானது. பின்னர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றோம். இதை இன்னும் மேம்படுத்துவது குறித்து ஆய்வுகள் செய்து வருகிறோம். மிகவும் எளிமையாக கை பையிலோ அல்லது சட்டைகளில் பொருத்துவது போன்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி கூறுகையில் சமுதாய அக்கறையுடன், தற்போதைய பிரச்சினை என்ன என்பதை உணர்ந்து இந்த டிபெண்ட்டர் ஸ்டிக்கை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் இந்த மாணவர்கள் பங்கேற்றது தனியார் பள்ளிக்கு எவ்விதத்திலும் அரசு பள்ளிகள் சளைத்தவை அல்ல. இங்கு பயிலும் மாணவரின் திறன் உயர்வானது என்பதை நிரூபித்து காட்டி விட்டது. இதனால் மாணவர்களுக்கு மட்டுமில்லை. எங்கள் பள்ளிக்கும் பெருமைதான். மேலும் சமூக அக்கறையுடன் புதிய கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வமும், உந்துதலும் மாணவர்களுக்கு ஏற்படுவது பாராட்டுக்குரியது என்றார்.
வழிகாட்டி ஆசிரியர்கள் செந்திகுமார், ராஜாத்தி ஆகியோர் கூறுகையில், மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு எங்களின் பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளது. இந்த டிபெண்டர் ஸ்டிக் மாவட்டம் மற்றும் மாநில போட்டிகளில் பங்கேற்றது. மேலும் தஞ்சாவூரில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியில் கல்வி அதிகாரிகள் ஆலோசனையின் படி 2 நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இது எங்கள் மாணவர்களுக்கும், எங்கள் பள்ளிக்கும் வெகுவாக பெருமையை சேர்த்துள்ளது. சமுதாயத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்ற உணர்வை மற்ற மாணவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்




















