TN 10th Result 2025: முன்னேறிய தஞ்சை மாவட்டம்... மாநில அளவில் எத்தனையாவது இடம்?
TN SSLC Result 2025: மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 15வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 12வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

TN SSLC Result 2025: தஞ்சாவூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் 12-வது இடம் பெற்றுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 95.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.57 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட 2.17 சதவீதம் கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 15வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 12வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
மாவட்டத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 415 மாணவர்களில் 13 ஆயிரத்து 500 பேரும், 14 ஆயிரத்து 860 மாணவிகளில் 14 ஆயிரத்து 478 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 93.65 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.43 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் தான் அதிகரித்துள்ளது.
அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 228 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 94.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், அரசு பள்ளிகளிலும் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 12வது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 88 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 163 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் 93.53 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த தேர்ச்சி கடந்த ஆண்டை விட 1.69 சதவீதம் கூடுதல் தேர்ச்சி ஆகும். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 335 பள்ளிகளில் 111 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.46 சதவீதத் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது. இந்த மாவட்டத்தில் தேர்வெழுதிய 7908 பேரில் 7628பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 7வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 94.77 சதவீதத் தேர்ச்சி பெற்றிருந்தது. கடந்த ஆண்டு மாநிலத்தில் 8வது இடம் பெற்றிருந்தது. தற்போது ஒரு இடம் முன்னேறி 7ம் இடம் பிடித்துள்ளது. 141-பள்ளிகளில் 70ள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது.
இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் 96.38 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 8 வது இடம் பெற்றுள்ளது. மேலும் பிளஸ் 1 வகுப்பு தேர்வில் தமிழக அளவில் அரியலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 97.76 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
பிளஸ் 1 வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 92.56 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் 7355 பேர் தேர்வெழுதினர். இதில் 6808 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 18வது இடம். கடந்த ஆண்டு 94.82 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. . கடந்த ஆண்டு மாநிலத்தில் 6வது இடம் பெற்றிருந்தது. 81-பள்ளிகளில் 24 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.





















