’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’புதுச்சேரியிலேயே அவரது கட்சிக்கு ஆள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டில் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக எப்படி தகுதியான நபரை தேர்வு செய்வார் ஜோஸ் சார்லஸ்?’

பிரபல லாட்டரி அதிபர் மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ், முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் புதுச்சேரி அரசியலில் களமிறங்கத் துடித்துக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று கனவுக் கூட காணமுடியாது என்பதால் அவர் தேர்வு செய்த இடம்தான் புதுச்சேரி. தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலாத்தலமாகவும் ஜோஸ் சார்லஸ்க்கு இப்போது கனவு காணும் களமாகவும் மாறியிருக்கிறது புதுச்சேரி.
கட்சி பெயரை மாற்றிய சார்லஸ்
இந்நிலையில், புதுச்சேரி வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, விஜயோடு கூட்டணி அமைத்து புதுச்சேரியில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற ஜோஸ் சார்லஸ் எண்ணத்தில் டன் கணக்கில் மண் அள்ளிக் கொட்டியிருக்கிறார் அவரது மைத்துனரும் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராகவும் உள்ள ஆதவ் அர்ஜூனா. நீ பெரிய ஆளா? அல்லது நான் பெரிய ஆளா என்கிற ஈகோ மோதல் அவர்களுக்கு இடையே நடந்து வரும் நிலையில், விஜய் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்ற தன்னுடைய முயற்சிக்கு ஆதவ் அர்ஜூனா எண்ட் கார்டு போட்டதால், ஆதவ் அர்ஜூனாவை அரசியலில் வீழ்த்த புதிய வியூகத்தை ஜோஸ் சார்லஸ் அமைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், புதுச்சேரி வெற்றிக் கழகம் என்று தொடங்கவிருந்த தன்னுடைய கட்சி பெயரை ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்று மாற்றியிருக்கிறார் ஜோஸ் சார்லஸ் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏனென்றால், புதுச்சேரி வெற்றிக் கழகம் என்று கட்சித் தொடங்கினால், தமிழ்நாட்டில் அந்த பெயர் எடுபடாது என்பதால், தமிழ்நாட்டிலும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, இந்த பெயரை அவர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லீங்க
இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் தொகுதியில் அவரை தோற்கடிக்க எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்ய ஜோஸ் சார்லஸ் முடிவு செய்திருப்பதாகவும், அவரை எதிர்க்க இப்போதே வேட்பாளரை தமிழ்நாட்டில் அவர் தேடிக்கொண்டிருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆதவ் அர்ஜூனா தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அது தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளி என்பதை ஜோஸ் சார்லஸ் உணர்ந்து இவ்வாறு செயல்படத் தொடங்கியிருப்பதாகவும், தங்களுடைய தயவில் வளர்ந்த ஆதவ் அர்ஜூனா அரசியலில் பதவியை பிடித்துவிட்டால் ,நாளை அவரிடம் சென்று நின்ற நேரிடுமே என்ற பயத்திலும் அவரை தோற்கடிக்க இப்போதே முழு மூச்சாக ஜோஸ் சார்லஸ் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், புதுச்சேரியிலேயே அவரது கட்சிக்கு ஆள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டில் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக எப்படி தகுதியான நபரை தேர்வு செய்து தேர்தலில் எதிர்த்து போட்டியிட வைக்கப்போகிறார் ஜோஸ் சார்லஸ் என்ற கேள்வியை அவரது அலுவலக ஆட்களே தங்களது வாட்ஸ்-அப் குழுக்களில் கேட்டுக்கொண்டு சிரித்து வருவதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி மக்கள் அதிருப்தி
திடீர் பிள்ளையார்போல், நலத் திட்ட உதவிகள், மன்றம் என புதுச்சேரியில் திடீரென வலம் வரும் ஜோஸ் சார்லஸை, மக்கள் நம்பவில்லையென்றும், அவரது குடும்ப பஞ்சாயத்து, ஈகோ யுத்தத்திற்காக, அரசியலில் இறங்கி, மக்களை பலிகடா ஆக்க சார்லஸ் முயற்சித்து வருவதாக புதுச்சேரி மக்களே பரபரப்பாக பேசி வருவதாக தெரிகிறது. இதனால் அவரை நம்பிச் செல்வதற்கே பலரும் அஞ்சி வருவதாகவும் கூறப்படுகிறது.





















