TVK Vijay: அனல்பறக்கும் அரசியல் களம்.. ’’மனம் தளர வேண்டாம்’’- தம்பி, தங்கைகளுக்கு விஜய் பரபர ட்வீட்!
Tamil Nadu 12th Result 2026: பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்- விஜய் பதிவு

அனல் பறக்கும் அரசியல் களத்துக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ’’வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் வாழ்த்து
தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக தேர்ச்சி பதிவாகி உள்ளது. மொத்தம் 95.2 சதவீத மாணவ- மாணவிகள் இந்த முறை தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், பிளஸ் 2 தேர்வை எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
மனம் தளர வேண்டாம்..
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!’’ என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பது என்ன?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக முதன் முதலில் போட்டியிட்டு, 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக உடன் கைகோத்துள்ள நிலையில், தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
எனினும் மீதமுள்ள 5 எம்எல்ஏக்களைக் கூட்டணியில் சேர்க்க தவெக முயன்று வருகிறது. விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி இன்று இரவு முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில், விசிக நாளை காலை முடிவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசியல் களமே தகித்துக் கிடக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























