புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மாநில அளவில் முதலிடம் பிடித்த கிரிஷாந்த் அபினவ்; நெகட்டிவ் மதிப்பெண் பெற்ற மாணவர்களும் பட்டியலில் இடம்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களின் 85 சதவீத மாநில ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலை புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியல் நிலவரம்:
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில், நடப்பாண்டுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 5,402 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் முதலிடம்: மாணவர் கிரிஷாந்த் அபினவ் 670 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 553-வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள்: மாணவர்கள் பிரவீன் மற்றும் ரமணீஷ்வர் ஆகியோர் தலா 646 மதிப்பெண்கள் பெற்று முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் முறையே 1721 மற்றும் 1756-வது இடங்களை வகிக்கின்றனர்.
அரசு கல்லூரி வாய்ப்பு: மாநில அளவில் 600 மற்றும் அதற்கு மேல் 13 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளதால், இவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை கிடைப்பது உறுதியாகியுள்ளது.
பட்டியலில் இடம்பெற்ற 'நெகட்டிவ்' மதிப்பெண்கள்:
வெளியாகியுள்ள தரவரிசைப் பட்டியலில் விண்ணப்பதாரர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் -1 முதல் -23 வரையிலான நெகட்டிவ் (Negative Marks) மதிப்பெண்களைப் பெற்ற 10 மாணவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
நீட் தேர்வில் -1, -3, -6, -7, -9, -11, -14, -15, -16 மற்றும் -23 என மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தரவரிசைப் பட்டியலில் 4707 முதல் 4716 வரையிலான இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதன் மூலம் இவர்களுக்கு மருத்துவச் சேர்க்கை வாய்ப்பு உறுதியாகாது என்ற போதிலும், இத்தகைய மதிப்பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மாணவர்களிடையே ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போலி இருப்பிட சான்றிதழ் தடுப்பு - ஆகஸ்ட் 5 வரை புகார் அளிக்க வாய்ப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து மாநில ஒதுக்கீட்டுப் பட்டியலில் இடம்பெறுவதாகவும், இதனால் உள்ளூர் மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இதனைக் கட்டுப்படுத்தி தகுதியான புதுச்சேரி மாணவர்களுக்கு வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளியீடு செய்யப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் முறைகேடுகள், பிற மாநில மாணவர்களின் பெயர்கள் அல்லது தகுதி குறித்த ஆட்சேபனைகள் இருந்தால், உரிய ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் புகார் தெரிவிக்கலாம். புகார்களை DMS@PY.GOV.IN என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கலந்தாய்வு மற்றும் சேர்க்கை கால அட்டவணை:
மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது:
கலந்தாய்வு பதிவு: ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 12 வரை
சாய்ஸ் பில்லிங் (Choice Filling): ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 13 வரை
இட ஒதுக்கீடு அறிவிப்பு: ஆகஸ்ட் 17
கல்லூரிச் சேர்க்கை: இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்ட் 18 முதல் 22-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
மாநில தரவரிசைப் பட்டியல் தொடர்பான கூடுதல் விவரங்களை புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் சேவைகள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்






















