![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TET Exam: ஆசிரியர் தகுதித் தேர்வு திடீரென ஒத்திவைப்பு; என்ன காரணம்?
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
![TET Exam: ஆசிரியர் தகுதித் தேர்வு திடீரென ஒத்திவைப்பு; என்ன காரணம்? Sudden postponement of Teacher Eligibility Test; what is the reason? TET Exam: ஆசிரியர் தகுதித் தேர்வு திடீரென ஒத்திவைப்பு; என்ன காரணம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/b094cfb59583560f031f2661b4a8e6751662194885944332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல்தாள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏப்ரல் 26ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1-க்கு 230,878 பேரும் மற்றும் தாள் 2-க்கு 401886 பேரும் என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்.
ஏற்கெனவே ஒத்தி வைப்பு
தாள் 1-ற்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 03/2022, நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது.
மீண்டும் ஒத்தி வைப்பு
ஆசிரியர் தேர்வு வாரியஇணையதளத்தில் 09.08.2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில், ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1-ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -1 ஒத்தி வைக்கப்படுகின்றது என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)