மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட நீட் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து சென்டாக் (CENTAC) நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட நீட் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வரும் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து சென்டாக் (CENTAC) நிர்வாகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பப் பதிவு பின்னணி:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேதம்) மற்றும் பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவம்) ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கைக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான அவகாசம் ஆகஸ்ட் 6-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவுறுத்தல்கள்:
சான்றிதழ்கள் புதுப்பித்தல்: புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் இன்னும் கிடைக்காத மாணவர்கள், தங்களது பழைய சான்றிதழ்களை இணைத்து ஆகஸ்ட் 8 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆனால், இறுதித் தரவரிசைப் பட்டியல் (Final Merit List) வெளியாவதற்குள் புதிய சான்றிதழ்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
திருத்தங்கள் செய்ய வழிமுறை: ஏற்கனவே விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவர்களுக்குத் தரவுகளை மாற்றும் எடிட் (Edit) வசதி நிறுத்தப்பட்டுள்ளது. விவரங்களை திருத்த விரும்புவோர் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கூடாது. சான்றிதழ்கள் பதிவேற்றவோ அல்லது திருத்தங்கள் செய்யவோ தங்களது 'Login Dashboard'-ல் உள்ள 'Grievance' வசதியைப் பயன்படுத்தி கோரிக்கை அனுப்ப வேண்டும்.
5,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்:
மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை மொத்தம் 6,575 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 5,518 பேர் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.
இட ஒதுக்கீடு & பிராந்திய ரீதியிலான விவரங்கள்:
ஒதுக்கீட்டு வாரியாக: அரசு ஒதுக்கீட்டில் 1,122, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 552, நிர்வாக ஒதுக்கீட்டில் 3,760 மற்றும் என்.ஆர்.ஐ (NRI) ஒதுக்கீட்டில் 61 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பிராந்திய வாரியாக: புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 1,674 மாணவர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த 3,760 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். தவிர, என்.ஆர்.ஐ பிரிவில் 61, ஓ.சி.ஐ (OCI) பிரிவில் 23 மற்றும் என்.ஆர்.ஐ ஸ்பான்சர் பிரிவில் 296 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
சிறப்புப் பிரிவு: அரசுப் பள்ளி மாணவர்கள் (61), சிறந்த விளையாட்டு வீரர்கள் (53), தியாகிகளின் வாரிசுகள் (33), முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் (13), மாற்றுத்திறனாளிகள் (2) மற்றும் தெலுங்கு மொழி சிறுபான்மையினர் (34) எனப் பல்வேறு பிரிவுகளின் கீழும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
உதவி எண்கள்:
சந்தேகங்கள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு மாணவர்கள் 0413-2655570 அல்லது 0413-2655571 ஆகிய உதவி எண்களையோ, அல்லது இணையதளத்தில் உள்ள 'Grievance' பகுதியையோ தொடர்புகொள்ளலாம்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















