’’அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்’’ அன்பில் மகேஸை பொளக்கும் நெட்டிசன்கள்!
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் பற்றி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ள கருத்துக்கு, நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

கடந்த திமுக ஆட்சியில் அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாக அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ள கருத்துக்கு, நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்
முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ’’உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பின்படி அரசு நகராட்சி/ உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மற்றும் நிலை-1 ஆகிய பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணிநிரவல் செய்வது மற்றும் பகிர்ந்தளித்தல் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது.
அவ்வரசாணையின்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 1328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிடங்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது’’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணை தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கைக்காகவும் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் இணைத்து அனுப்பப்பட்டது.
திராவிட மாடல் ஆட்சியில் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம்
இந்த சுற்றறிக்கையைப் பகிர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், ’’திராவிட மாடல் ஆட்சியில் உடற்கல்வி பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பணியிடங்களை உருவாக்கவும் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் (நிலை-2) பணியிடங்கள் புதிதாகத் தோற்றுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு முன்பே அரசாணை வெளியிட சுற்றாணைக் குறிப்பில் கையெழுத்தும் இடப்பட்டது. தற்போது அந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக 1328 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் (நிலை-2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
“மைதானமும் ஒரு வகுப்பறைதான்” என்பதை உணர்ந்து மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியப் பெருமக்கள் வழிகாட்டுவார்கள்’’ என்று பதிவிட்டு இருந்தார்.
நெட்டிசன்கள் கேள்வி
இதுகுறித்து அவரின் எக்ஸ் பக்கத்திலேயே அந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள், ’’நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் இடைநிலை பேராசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி வந்தீர்களே உங்களை என்ன என்று சொல்வது?’’
’’கடந்த ஆட்சியில் எத்தனை இடைநிலை ஆசிரியர் பணி வழங்க ஆணை பிறப்பித்தீர்கள்? எல்லாமே தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பாடம் எடுத்தீர்கள். அதனால்தான் நீங்கள் தோல்வியை கண்டீர்கள்’’.
’’தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அரசாணையை திமுக அரசு வெளியிட்டாலும் தேர்வை நடத்தி ஆசிரியர்களை மாணவர்களின் நலனுக்காக நியமிக்க உள்ளது தவெக அரசுதான்’’ என்று பதிவிட்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























