EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸை விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர். அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா.?

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக குறித்தும், காங்கிரஸ் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசும்போது, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல தமிழ்நாட்டில் காங்கிரஸ் பரிதாபமான நிலையில் உள்ளது என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர். அவர் என்ன பதிலடி கொடுத்துள்ளார் என்பதை இப்போது பார்க்கலாம்.
“'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' அதிமுகவிற்கே கச்சிதமாக பொருந்தும்“
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், “'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்! மத்தியில் பாஜகவிற்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் இபிஎஸ்-ன் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே!“ என்று கூறியுள்ளார்.
'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்!
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) July 14, 2026
மத்தியில் பாஜகவிற்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் இபிஎஸ்-ன் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை…
காங்கிரஸ் மீது எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனம் என்ன.?
முன்னதாக, சேலத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, 60 நாட்களில் தவெக ஆட்சி செய்த சாதனைதான் என்ன என கேள்வி எழுப்பியதோடு, முதலமைச்சர் போல விஜய் பேசவில்லை என்றும், 4ம் தர நபர்கள் போல அவர் பேசுவதாகவும் விமர்சித்தார். மேலும், கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் வரைதான் தவெக ஆட்சி நிலைக்கும் என்றும், முரண்பட்ட கருத்துக்கள் சொல்லும் கட்சிகளின் ஆதரவோடுதான் இந்த ஆட்சி நடக்கிறது என்றும் தெரிவித்தார்.
அதோடு, 2 திராவிட கட்சிகளும் சரியில்லை என்று சொன்ன விஜய், தற்போது திராவிட கட்சியின் ஆதரவோடு வெற்றி பெற்ற கூட்டணி கட்சியினர்களின் ஆதரவோடுதான் தவெக ஆட்சி நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பிறகு ஒரு பேச்சு என முதல்வர் விஜய் பேசுகிறார். திமுக, அதிமுக இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சித்தது என்பது கட்டுக்கதை. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போலத்தான் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் பரிதாபமான நிலையில் உள்ளது“ என்று அவர் விமர்சனத்தை முன்வைத்தார்.
மேலும், “திமுக ஆதரவில் வெற்றி பெற்று தற்போது தவெகவுடன் இணைந்து காங்கிரஸ் அதிகாரத்தை பெற்றுள்ளது. சினிமாவில் புதுமை படைப்பது போல விஜய் சினிமாவில் தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு அரசு பதவி வழங்கி வருகிறார். அரசாங்கம் என்பது சினிமா மாதிரி கேலி கூத்தாகி விட்டது.“ என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















