உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
18 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வரும் சூழலில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் குண்டுக் கட்டாக கைதான சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை கைது செய்த போலீசார் - 4 லட்சத்து 21 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தும், தப்பி ஓடிய 7 பேரையும் தேடி வருகின்றனர்.
பணம் வைத்து சூதாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பகுதியில் பணம் வைத்து ஒரு கும்பல் அடிக்கடி ரகசியமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான தனிப்பிரிவு காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில். செக்காணூரணி காவல் ஆய்வாளர் முத்து, சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் வடக்கம்பட்டி பகுதியில் தீடீர் ரோந்து மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது, வடக்கம்பட்டி அருகே பொன்னமங்கலம் கண்மாய் அருகில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த வடக்கம்பட்டியைச் சேர்ந்த ஜெயபாண்டி, தர்மர், உசிலம்பட்டியைச் சேர்ந்த ரகு, பாலமுருகன், காளப்பன்பட்டியைச் சேர்ந்த சேதுராமன், கண்ணூரைச் சேர்ந்த குழந்தைராஜ், விருதுநகரைச் சேர்ந்த சுப்பிரமணியன், வெங்கடேசன், மோகன்குமார், விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த ரகுநாதன், நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரபு என்ற 11 பேரை கைது செய்தனர்.
4 லட்சத்து 21 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம்
அவர்களிடமிருந்து 4 லட்சத்து 21 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம், 10 இரு சக்கர வாகனம், 15 செல்போன்கள் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய திருமங்கலத்தைச் சேர்ந்த குணசேகரன், காளப்பன்பட்டியைச் சேர்ந்த ஜனா, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த ஜெகதீஸ், அதிமண்ணன், விருதுநகரைச் சேர்ந்த சரவணன், நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த ரமேஷ், வடிவேல்கரையைச் சேர்ந்த மணி என்ற 7 பேரை தேடி வருகின்றனர். 18 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வரும் சூழலில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் குண்டுக் கட்டாக கைதான சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















