CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
முதன்முறையாகத் தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்கு நேரில் சென்ற . ஜோசப் விஜய், தொகுதி மக்களின் நீண்ட நாள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களை வாரி வழங்கியுள்ளார். பழுதடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மறுசீரமைப்பு, புதிய விளையாட்டு வளாகம், நவீன பேருந்து நிழற்குடைகள் மற்றும் டயாலிசிஸ் மையம் எனப் பெரம்பூர் தொகுதியின் முகவரியையே மாற்றும் வகையிலான பல்வேறு அதிரடித் திட்டங்களுக்கு அவர் உடனடியாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்கு முதன்முறையாக வருகை தந்தார் சி. ஜோசப் விஜய். இதனால், பெரம்பூரின் குறுகிய தெருக்கள் முழுவதிலும் விசில் சத்தங்களும், வாழ்த்தொலிகளும் விண்ணைப் பிளந்தன. வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் கடல்போல அலைமோதி, கைகளை அசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், குடியிருப்புப் பகுதிகள் வழியாக முதலமைச்சர் விஜய் நடந்து சென்று மக்களை நேரில் சந்தித்தார்.
முன்னதாக, சர்மா நகர் முதலாவது பிரதான சாலையில் புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (MLA) அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்த அலுவலக வளாகத்தில் ஆறு கணினிகளுடன் கூடிய புதிய இ-சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ்நாடு மின்-ஆளுமை முகமைப் பணியாளர்கள் மூலம் பொதுமக்கள் ஆதார், பான் கார்டு (PAN), குடும்ப அட்டை, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுச் சேவைகளுக்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும். இதன் அடையாளமாக, ஐந்து பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கி முதலமைச்சர் இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள வீட்டுவசதி, சுகாதாரம், குடிநீர் மற்றும் நகர்ப்புற மேம்பாடு சார்ந்த முக்கிய திட்டப்பணிகள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, எம்.கே.பி நகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக் கடைக்குச் சென்ற விஜய், பெரம்பூரைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை (Smart Card) வழங்கி, மாநிலம் தழுவிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஒப்புதல் பெறப்பட்டுள்ள 73,000 குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர். அங்கு வந்திருந்த மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் அவர் நேரில் வழங்கினார்.
அதன்பின், வியாசர்பாடியில் 47.5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக (MTC) மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். எதிர்காலத்தில் ஏசி வசதி கொண்ட தாழ்தள மின்சாரப் பேருந்துகளும் இந்தச் சேவையில் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.
முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ள 1,000 கோடி ரூபாய் திட்டங்களில், குறிப்பாக சிதிலமடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்ய 544 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி, முல்லை நகர் மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் உள்ள பல தசாப்தங்கள் பழமையான குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் புதிய வீடுகளாகக் கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், புகழ்பெற்ற அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், 160 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையங்கள், பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட 11 பொதுப் பயன்பாட்டு வசதிகளும் தரம் உயர்த்தப்படவுள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்திற்கும் முதலமைச்சர் பச்சைக்கொடி காட்டியுள்ளதால், இதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட உள்ளன.
இதுமட்டுமின்றி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியான 3 கோடி ரூபாயைப் பயன்படுத்திப் பொதுமக்களுக்கான கூடுதல் வசதிகளைச் செய்யுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) ஆணையரிடம் முதலமைச்சர் விஜய் பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















