TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
பழனி கோயில் விவகாரம், நாகர்கோயில் சிறைக்கைதி மரணம் என்று அடுத்தடுத்து தவெக ஆட்சிக்கு இரண்டே நாளில் கண்டனங்கள் குவித்து வருகிறது.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. செங்கோட்டையன் தவிர முதலமைச்சர் விஜய் உட்பட அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு அமைச்சரவையில் இடம்பெறுவது இதுவே முதன்முறை ஆகும். தவெக ஆட்சிக்கு சட்டம் - ஒழுங்கு, ஊழல் ஆட்சிப் பொறுப்பேற்றபோதே மிகப்பெரிய சவாலாக இருந்தது.
பழனி கோயில் விவகாரம்:
அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள ஒவ்வாெருவர் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பதிவு செய்துள்ள சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அமைச்சர் ரமேஷிற்கு நெருக்கடி:
இந்த விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பதிவாளர் மீது மட்டும் பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
லாக்கப் மரணம்:
கடந்த அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் மக்களின் அதிருப்திக்கு அதிகம் ஆளானது லாக்கப் மரணம் எனப்படும் காவல் நிலைய சிறையில் நடந்த மரணங்கள். இந்த சூழலில், நாகர்கோயிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சபரிவர்மன் என்ற 35 வயது இளைஞர் திடீரென மரணம் அடைந்தார். அவரது உடலை உடற்கூராய்வு பரிசோதனை செய்தபோது அதில் 19 இடங்களில் காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவர் காவல்துறையின் தாக்குதலிலே உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிறை வார்டன், சிறைக் காவலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்கு எதிராக அமைந்த சிறை மரணங்கள் தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்கிறதா? என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. ஈரோடு பவானியில் கார்களில் குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி அருணுக்கு, காவல் நிலையத்தில் வைத்தே ஜாமின் வழங்கி அனுப்பப்பட்ட விவகாரம் மிகப்பெரிய அளவில் தவெக அரசுக்கு கண்டனத்தை உருவாக்கி வருகிறது.
என்ன நடவடிக்கை எடுப்பார்?
முதலமைச்சர் விஜய் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். லஞ்சம் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த சூழலில், செங்கல்பட்டு அருகே ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த செயல்கள் விஜய்க்கும், தவெக-விற்கும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















