மேலும் அறிய
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் மதுரையில் தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் !
ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக கூடாது; பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மோடி அரசு நீட் தேர்வை திணிக்கிறது. - எனவும் குற்றச்சாட்டு.

முற்றுகைப் போராட்டம்
Source : whatsapp
நீட் தேர்வு தொடர்ந்து மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது
நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் சார்பில் மீனாட்சி பஜார் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் முற்றுகையிட்டு போராட்டம் மாவட்ட தலைவர் ஜெ. டீலன் ஜெஸ்டின் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சி. டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினர் தீபலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் ஜெ. டீலன் ஜெஸ்டின் கூறியதாவது..," 2017ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வு தொடர்ந்து மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது. மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த தேர்வாக நீட்டை மத்திய அரசு விளம்பரப்படுத்தினாலும், அதில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் கம்மல், செயின் உள்ளிட்ட அனைத்தையும் கழற்றி வைத்து தேர்வு எழுத வேண்டிய அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தும், வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது.
திட்டமிட்டு மாணவர்களின் எதிர்காலம் சீரழிக்கப்படுவதை காட்டுகிறது.
ராஜஸ்தானில் ரூ.30 லட்சத்திற்கு நீட் வினாத்தாள் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 16 பேருக்கு ஒரே மதிப்பெண் கிடைத்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் பாஜக நிர்வாகியும் இருப்பது, திட்டமிட்டு மாணவர்களின் எதிர்காலம் சீரழிக்கப்படுவதை காட்டுகிறது. இந்தியாவெங்கும் 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். ஒரு மாநிலத்தில் நடந்த முறைகேட்டுக்காக அனைத்து மாணவர்களையும் மீண்டும் தேர்வு எழுத வைப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. இது மாணவர்களின் மனநிலையையும் உடல்நிலையையும் கடுமையாக பாதிக்கும்.
மோடி அரசு நீட் தேர்வை திணிக்கிறது.
ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக கூடாது; பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மோடி அரசு நீட் தேர்வை திணிக்கிறது. இதை இந்திய மாணவர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது,” என தெரிவித்தார். மேலும், நீட் தேர்வை ரத்து செய்து மாநிலங்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தனர். முன்னதாக சேதுபதி பள்ளி அருகில் இருந்து ஒன்றிய அரசின் நீட் தேர்வு கொள்கைக்கு எதிராக மற்றும் முறைகேடு கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிம்மக்கல் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















