இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
மாணவர்களின் செல்போன் மோகத்தைக் கட்டுப்படுத்த புதிய டிஜிட்டல் நல்வாழ்வு கொள்கையை கர்நாடக மாநில அரசு வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் செல்போன் மோகம்; கட்டுப்படுத்த புதிய 'டிஜிட்டல் நல்வாழ்வு கொள்கையை' வெளியிட்டது கர்நாடக அரசு!
பள்ளி மாணவர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செல்போன் மோகம் மற்றும் திரை அடிக்ஷனைக் குறைத்து, அவர்களின் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் கர்நாடக அரசு புதிய 'டிஜிட்டல் நல்வாழ்வு வரைவு கொள்கையை' (Draft Policy for Digital Well-Being) வெளியிட்டுள்ளது.
பிரபல மனநல மருத்துவ நிறுவனமான நிம்ஹான்ஸ் உடன் இணைந்து இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. பதின்ம வயதினரிடையே, குறிப்பாக 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களிடையே இணைய அடிமைத்தனம் 25% ஆக அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுப்பதற்கான பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகள் இந்த வரைவில் இடம்பெற்றுள்ளன.
கொள்கையின் முக்கிய அம்சங்கள்
- 1 மணி நேர கட்டுப்பாடு: மாணவர்கள் பொழுதுபோக்குக்காக செல்போன், லேப்டாப் போன்ற டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பதைக் குறைக்க வேண்டும். குறிப்பாக தினமும் அதிகபட்சம் 1 மணி நேரமாக மட்டுமே கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- கண்காணிப்பு குழுக்கள்: அனைத்து பள்ளிகளிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் அடங்கிய 'டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குழுக்கள்' அமைக்கப்பட வேண்டும்.

- வாட்ஸ் அப்புக்கு பதில் டைரி: ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான பள்ளிக் கட்டளைகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தவிர்த்து, பழைய முறைப்படி 'பள்ளி டைரி' முறையை மீண்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இரவு 7 மணிக்கு மேல் 'டேட்டா கட்': மாணவர்கள் இரவு நேரங்களில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடுக்க, ஆடியோ மட்டும் வேலை செய்யும் வகையிலும், இரவு 7 மணிக்கு பிறகு தானாகவே இணைய சேவை துண்டிக்கப்படும் வகையிலும் சைல்டு பிளான்களை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் டீடாக்ஸ்: மாணவர்களை வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுத்த, பள்ளிகளில் 'டிஜிட்டல் டீடாக்ஸ் வாரங்கள்' மற்றும் 'இணையமில்லா மகிழ்ச்சி நாட்கள்' (Offline Joy Days) அறிமுகப்படுத்தப்படும்.
தொழில்நுட்ப மனஅழுத்தத்தால் மாணவர்களின் கவனம் சிதறுவது பெரும் பிரச்சினையாக மாறியுள்ள இக்காலகட்டத்தில், மாணவர்களின் பொறுப்பான டிஜிட்டல் பயன்பாட்டை உறுதிசெய்யும் கர்நாடக அரசின் இந்த புதிய முன்னெடுப்பு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
























