IIT Madras: ஐஐடி சென்னையில் டேட்டா சைன்ஸ் படிப்பு அறிமுகம்; வேலைவாய்ப்பு பிரகாசம்- விண்ணப்பிப்பது எப்படி?
ஐஐடி சென்னையில் தரவு அறிவியல் & மேலாண்மை இளங்கலை! வேலைவாய்ப்பு, எதிர்காலம் பிரகாசம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31, 2026

ஐஐடி சென்னை, மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் படிப்பில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை (B.S. Data Science) அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) மேலாண்மைக் கல்வித் துறை (Department of Management Studies – DoMS) மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் எனும் பல்துறை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்படிப்பில் சேருவோரை வணிகரீதியாக முடிவெடுத்தல், சிந்தித்து திட்டமிடல், தரவு சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறச் செய்யும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறுவோருக்கு ஐஐடி சென்னையின் இளங்கலை அறிவியல் பட்டம் வழங்கப்படும். இக்கல்வி நிறுவனம் வழங்கும் இதர இளங்கலைப் பட்டங்களுக்கு நிகரான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும்.
மாணவர் சேர்க்கை, கற்றல் தளம், வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை ஐஐடி சென்னையின் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (Centre for Outreach and Digital Education - CODE) செய்துகொடுக்கும்.
பட்டதாரிகளை தொழில்ரீதியாகத் தயார்படுத்தும் வகையில் உள்ளகப் பயிற்சி மற்றும் ப்ராஜக்ட் அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகளை வழங்குவதற்காக தொழில்துறையினருடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயல்படுகிறது.
முக்கிய தேதிகள்
இப்படிப்பின் முதல் பேட்ச் ஜூன் 2026-ல் தொடங்கும். இதற்கு விண்ணப்பிக்க மே 31, 2026 கடைசி நாளாகும். இதற்கான தகுதித் தேர்வு ஜூலை 19ஆம் தேதி நடைபெறும். 12ஆம் வகுப்பை முடித்தவர்கள், இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
பாடத்திட்டம் மற்றும் மாணவர் சேர்க்கை விவரங்களை https://study.iitm.ac.in/mg என்ற இணையதளத்தில் காணலாம்.
இந்த பாடத்திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, இன்று (பிப்ரவரி 21, 2026) ஐஐடி சென்னை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
வேலைவாய்ப்பு எப்படி?
உற்பத்தி- கட்டுமானம், வங்கி- நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம்- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்வணிகம், ஆலோசனை, சுகாதாரம், கொள்கை வகுப்பு அமைப்புகள் போன்ற துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. உயர்படிப்புகள்,ஆராய்ச்சி, தொழில்முனைவு முயற்சிகளுக்கு வலுவான அடித்தளத்தை இப்பாடத்திட்டம் வழங்குகிறது.
























