Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
’’அண்ணா பல்கலைக்கழக பெண் பேராசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நிர்வாகம் பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றதால் கொளுத்தும் வெயிலிலும் குடை பிடித்து உட்கார்ந்திருக்கிறோம்’’

திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக உதவிப் பேராசிரியர்கள், 9-வது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தை நிறுத்த பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சி செய்வதாக பேராசிரியர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
எனினும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உதவிப் பேராசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாங்க என்ன தப்பு செஞ்சோம்?
இதுகுறித்து திருச்சி வளாகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக உதவிப் பேராசிரியர் சரவணக் குமார் ஏபிபி நாடுவிடம் கூறும்போது, ’’நாங்க என்ன தப்பு செஞ்சோம்? 13 வருஷமா அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உண்மையா உழைச்சதுக்கு எங்களுக்குக் கிடைச்ச பரிசுதான் இந்த பணி நீக்கமா?
படிப்புக்கும் பணிக்கும் எந்த மரியாதையும் இல்லையா?
குறைந்த ஊதியத்தில் பணியாற்றினாலும் மதிப்பு, மரியாதை இருந்தது. எங்களைப் பணிநீக்கம் செய்து, மாணவர்கள் மத்தியில் அவமானத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். எங்கள் பிஎச்.டி படிப்புக்கும் இத்தனை ஆண்டுகள் பணி அனுபவத்துக்கும் எந்த மரியாதையும் இல்லையா?
நாங்கள் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கோ, அரசுக்கோ எதிராகப் பேசவில்லை. உண்மையை, உரிமையையே கேட்கிறோம். அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும்’’ என்று சரவணக் குமார் தெரிவித்தார்.
உதவிப் பேராசிரியர் பத்மா வேதனை மல்கப் பேசினார். ’’பெண் பேராசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். போராட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி பெற்றிருந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் நாங்கள் பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துவிட்டது. இதனால் கொளுத்தும் வெயிலிலும் குடை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்.

மருத்துவமனையில் அனுமதி
பெண் பேராசிரியர்களுக்கு மாதாந்திர பிரச்சினைகளோடு, சிறுநீர்த் தொற்று, மயக்கம், வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது. சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் மன உறுதியோடு, தொடர்ந்து 9ஆம் நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
எங்களுக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, மாணவ சமுதாயத்துக்கு அநியாயம் செய்துகொண்டு இருக்கிறார்கள். போராட்டத்தை நாங்கள் நிறுத்தப் போவதாக இல்லை. எங்களின் உரிமை எங்களுக்குக் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’’ என்று தற்காலிக உதவிப் பேராசிரியர் பத்மா உறுதிபடத் தெரிவித்தார்.

கற்றல் பாதிப்பு
தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாணவர்களின் கற்றலும் பாதிக்கப்பட்டுள்ளது. இருக்கும் நிரந்தர ஆசிரியர்களால் பாடத்திட்டத்தை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இனி வரப்போகும் இன்டர்னல் தேர்வை எப்படி மாணவர்கள் எழுதப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இறுதி ஆண்டு புராஜெக்ட் மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக மாறி இருக்கிறது என்றும் இந்த ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






















