அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்!
Anna University: அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்திலும் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான தற்காலிக பேராசிரியர்கள் ஜனவரி 31ஆம் தேதியோடு திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, அதிர்வலைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து அவர்கள் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
328 உதவிப் பேராசிரியர்கள் பணி நீக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்னையில் 4 வளாகங்களும், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 16 நகரங்களில் உறுப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த 16 கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் 328 உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வேலையில் உள்ளனர். இவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை பணி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கம்..
இவர்களுக்குத் தற்போது 27ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நிரந்தர ஊழியர்களைப் போன்றே பணியாற்றி வருகின்றனர். தேர்வு கண்காணிப்பாளர்களாகவும் செயலாற்றி வருகின்றனர். இவர்களை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்துள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே திமுக அரசு தனது தேர்தல் தேர்தல் வாக்குறுதி எண் 153-ன் படி 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 328 பேர் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீண் காகிதமா நாங்கள்?
இதுகுறித்து திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றிய தற்காலிக உதவிப் பேராசிரியரான அகில் வேதனையுடன் பேசினார். ’’வீண் காகிதம் போல பயன்படுத்திவிட்டு எங்களை தூக்கிப் போட்டிருக்கிறார்கள். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. 6 மாதத்துக்கு ஒருமுறை எங்களின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று நினைத்தோம். ஆனால் நடக்கவில்லை.
சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும் என்று அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், எங்களுக்கு (தற்காலிக பேராசிரியர்கள்) அதிக வேலை இல்லை என்று கூறி வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றனர்.
நான் 2012ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து பணியில் இருக்கிறேன். என்றாவது பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில், இத்தனை ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். ஊதியம் வெறும் 27 ஆயிரம் ரூபாய்தான் என்றாலும், நிரந்தர பேராசிரியர்கள் செய்யும் அனைத்து பணியையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

தனியார் கல்லூரிகளுக்கும் செல்ல முடியாது
ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை 3 வேலை நாட்கள் கழித்துத்தான் எங்களை மீண்டும் ஒப்பந்தம் செய்வர் என்பதால், எங்களுக்கு பணி அனுபவ சான்றிதழும் இத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்துக் கிடைக்காது. இதனால் தனியார் கல்லூரிகளுக்கும் செல்ல முடியாது. ஃப்ரெஷராகத்தான் சேர முடியும். நாங்கள் எல்லோருமே 35 வயதைக் கடந்தவர்கள்.
அண்மையில் தேர்வு மூலம் 190 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரந்தர பேராசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இதைக் காரணம் காட்டி நிதி நிலைமை காரணமாக எங்களைப் பணிநீக்கம் செய்ததாகச் சொல்கின்றனர். ஆனால் இந்த 190 பேர் தாண்டியும் காலிப் பணியிடங்கள் ஏராளமாக இருக்கின்றன. தாராளமாக எங்களையும் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் ஆக்கலாம். சொல்லப் போனால், அந்த 190 பேரின் பணி நியமனத்திலேயே எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
நாங்களும் முறையாக எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலமாகத்தான் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோம். எங்களில் ஏராளமானோர் பிஎச்.டி. முடித்திருக்கிறோம். சிலர் முடிக்கப் போகிறார்கள் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி, 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதேபோல சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’’ என்று தற்காலிக உதவிப் பேராசிரியர் அகில் தெரிவித்தார்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக வட்டாரத்தில் சிலர் கூறும்போது, ’’இந்த தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணி நீட்டிப்பு செய்யப்படலாம். எனினும் பணி நிரந்தரம் செய்யப்பட வாய்ப்பில்லை’’ என்றே தெரிவித்தனர்.
விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்!
இந்த விவகாரம் குறித்து ’ஏபிபி நாடு’ சார்பில் தொலைபேசியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் குமரேசனிடம் விளக்கம் கேட்டோம். ’’போனில் இதுதொடர்பாகப் பேசக்கூடாது என்று உத்தரவு இருக்கிறது. நேரில் வாருங்கள், பேசுவோம்’’ என்று போனைத் துண்டித்தார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனை இதுதொடர்பாக பல முறை தொடர்பு கொண்டோம். எனினும் அவரும் நமது அழைப்பை ஏற்கவில்லை.
























