தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகளாகப் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள்; பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காகக் கணினி அறிவியல், உடற்கல்வி, ஓவியம், தையல், மற்றும் இசை ஆகிய சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இவர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக வெறும் ரூ. 5,000 மட்டுமே வழங்கப்பட்டது.
12 ஆயிரம் பேர் மட்டுமே
காலப்போக்கில் போதிய வருமானம் இல்லாததாலும், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவாலும் பலர் பணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது சுமார் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம் பல கட்டங்களாக உயர்த்தப்பட்டு, தற்போது அதிகபட்சமாக ரூ. 15,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வாரம் மூன்று அரை நாட்கள் வீதம் பணியாற்றும் இவர்களுக்கு, மே மாதத்திற்கான கோடை விடுமுறை ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்த மிகக் குறைந்த ஊதியத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் இந்த 12,000 ஆசிரியர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஆண்டுகள் பல கடந்த நிலையிலும், அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
தொடர்ந்து தவெக அரசு அளித்த வாக்குறுதியில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறப்பட்டது. தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
முதல்வர் தலையிட கோரிக்கை
எனவே, பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியம் (Time Scale Pay) வழங்கி, முழுநேர ஆசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனப் பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























