Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
குழந்தையை பிரேத பரிசோதனை செய்தபோது மருத்துவர்களுக்கு சந்தேகம் வரவே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையில் பேசிய சேகப்பா அளித்த தகவல் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை உண்டாக்கியது.

கர்நாடகா மாநிலத்தில் கணவன்,மனைவி இடையேயான தகராறில் 11 மாத குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் இருவருக்கும் மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெங்களூரு நகரில் நடைபெற்றுள்ளது. கிழக்கு பெங்களூருவில் உள்ள அவலஹள்ளி காவல் நிலைய அதிகார வரம்பிற்குட்பட்ட கிட்டகனூர் கிராமத்தில் சேகப்பா என்ற நபர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 11 மாதத்தில் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இதனிடையே கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி இரவு குழந்தையை அங்குள்ள ஈஸ்ட் பாயிண்ட் மருத்துவமனைக்கு சேகப்பா, விஜயலட்சுமி தம்பதியினர் அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குழந்தையை பிரேத பரிசோதனை செய்தபோது மருத்துவர்களுக்கு சந்தேகம் வரவே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையில் பேசிய சேகப்பா, தனது மனைவி விஜயலட்சுமி தாய்ப்பால் கொடுக்கும்போது உறங்கிவிட்டதாகவும், அப்போது குழந்தை படுக்கையிலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். எனினும் இந்த வழக்கு ஆரம்பத்தில் இயற்கைக்கு மாறான மரணமாகப் பதிவு செய்யப்பட்டே விசாரணை தொடர்ந்தது.
இதற்கிடையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இருந்த தகவலும், சேகப்பா, விஜயலட்சுமி கூறிய தகவலும் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. சேகப்பா, விஜயலட்சுமியிடம் நடைபெற்ற கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை வெளிவந்தது.
முன்னதாக ஜூன் 22ஆம் தேதி பெறப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தைக்கு பல உள் காயங்களால் ஏற்பட்ட அதிகப்படியான உள் இரத்தப்போக்கு மற்றும் சுவாசச் சிக்கல்கள் காரணமாக இறந்தது என்பதை தெரிவிக்கப்பட்டிருந்தது. குழந்தையின் உடலில் முகம், மார்பு, கால்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் ஏற்பட்ட காயங்கள் இருப்பது அதில் கண்டறியப்பட்டது. மேலும் கட்டிலின் உயரம் சுமார் இரண்டு அடி மட்டுமே இருந்ததால் ஒருவேளை குழந்தை விழுந்திருந்தால் கூட காயங்கள் பெரிதாக ஏற்பட்டிருக்காது என குறிப்பிடப்பட்டிருந்தது.
Also Read: Keerthana: அரசுப்பள்ளி அவலம்.. கொந்தளித்த அமைச்சர் கீர்த்தனா.. ரவுண்டு கட்டிய அன்பில், உதயநிதி!
இதனையெல்லாம் வைத்து கேட்டபோது தாங்கள் சிக்கிக்கொண்டதை உணர்ந்த தம்பதியினர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், “ஜூன் 9 ஆம் தேதி மதியம் வெளியே சென்றிருந்த சேகப்பா மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள்ளது. சண்டையின் போது குழந்தை அழுததால் விஜயலட்சுமி உதைத்துள்ளார். ஆத்திரத்தில் சேகப்பா குழந்தையைத் தூக்கி பலமாகத் தரையில் வீசியதில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. விஜயலட்சுமிக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்ததாகவும், அவர் தன் குழந்தையிடம் பாசமாக இருக்கவில்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் சேகப்பாவுடன் சுமூகமான உறவு ஏற்படவில்லை” என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து குழந்தையின் தந்தை சேகப்பா மற்றும் தாய் விஜயலட்சுமி இருவரையும் கொலை வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















