Gold Rate 18th June: இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பியுள்ளது, பொதுமக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இன்றைய விலை என்ன தெரியுமா.?

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் கணிசமாக குறைந்தது. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என பொதுமக்கள் எண்ணியிருந்த நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இன்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை
தங்கத்தின் விலை, கடந்த 10-ம் தேதி, கிராம் 8,945 ரூபாயாகவும், சவரன் 71,560 ரூபாயாகவும் விற்பனையானது. தொடர்ந்து, 11-ம் தேதி கிராம் 9,020 ரூபாயாக அதிகரித்த நிலையில், சவரன் 72 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் 72,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
12-ம் தேதியும் விலை உயர்ந்து, கிராம் 9,100 ரூபாயாகவும், சவரன் 72,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 13-ம் தேதி கிராமிற்கு அதிரடியாக 195 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 9,295 ரூபாயாகவும், ஒரு சவரன் 74,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதையடுத்து, 14-ம் தேதியும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,320 ரூபாயாகவும், ஒரு சவரன் 74,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. 15-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கம், 16-ம் தேதி விலை குறையத் தொடங்கியது.
அதன்படி, கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிரராம் 9,305 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 குறைந்து ஒரு சவரன் 74,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்தது தங்கத்தின் விலை.
அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 105 ரூபாய் குறைந்து, கிராம் 9,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரனுக்கு 840 ரூபாய் விலை குறைந்து, சவரன் 73,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது.
அதன்படி, கிராம் ஒன்றிற்கு 50 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 9,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் சரியாக 74,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை 2 நாட்கள் குறைந்த நிலையில், தொடர்ந்து குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்று விலை உயர்ந்துள்ளதால், வரும் நாட்களில் மேலும் உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கம் வாங்குவோர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளியின் விலையும் ரூ.2 உயர்வு
தங்கத்தை போலவே, வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 10-ம் தேதி 119 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 12-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது. அதன்பின்னர், 13-ம் தேதி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து, 120 ரூபாய் என்ற உச்ச விலையை அடைந்தது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையானது.
அதைத் தொடர்ந்து, நேற்று வரை கிராமிற்கு 120 ரூபாய் என் அதே விலையில் நீடித்த நிலையில், இன்று கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 122 ரூபாய் உன்ற உச்ச விலையை அடைந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





















