![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குங்கள்... குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காப்பீட்டுத் தொகை வழங்க்க் கோரி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
![பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குங்கள்... குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Thanjavur news Provide crop insurance Farmers who came to participate in grievance redressal meeting protest - TNN பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குங்கள்... குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/7556c37ef217de2b664da4803b936fe11706063918057733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: காப்பீட்டுத் தொகை வழங்க்க் கோரி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜீவக்குமார்:- தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா செல்லப்பன்பேட்டை கிராமத்தில் பெத்தமாதுரான்ஏரி, பகடைக்குடி ஏரி, கல்லணைக்கால்வாய் மூலம் பாசனம் நடக்கிறது. இதன் பாசனபரப்பு 300 ஏக்கர் ஆகும். நடப்பு ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் பல பகுதிகளில் சாகுபடி நடைபெறவில்லை. சில இடங்களில் 15 சதவீதம் சாகுபடி செய்தும் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. செல்லப்பன்பேட்டை கிராமத்திலும் இதே நிலை தான். 75 சதவீதத்துக்கு மேல் சாகுபடி செய்யாத கிராம விவசாயிகளுக்கு வழங்கும் காப்பீட்டுத்தொகைையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தொகையையோ வழங்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு பாசனதாரர் சங்க தலைவர் தங்கவேல்:- ஒரத்தநாடு வேளாண்மைத்துறை மூலம் சாகுபடிக்கு உளுந்து வினியோகம் செய்யப்பட்டது. ஒரத்தநாட்டில் கிலோ ரூ.100-க்கும், பட்டுக்கோட்டையில் ரூ.75-க்கும், மதுக்கூரில் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. விவசாயிகளுக்கு மானியம் எவ்வளவு? ஏன் இப்படி விலையில் மாற்றங்கள் உள்ளன. எனவே இதனை சரி செய்து விவசாயிகளுக்கு உரிய மானியத்துடன் சரியான விலையில் உளுந்து விதை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர்:- சம்பா நெற்பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து உடன் தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது சம்பா அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதால் கதிர் அறுக்கும் இயந்திர உரிமையாளர்கள், அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
முன்னதாக விவசாயிகள் ஜீவக்குமார் தலைமையில் செல்லப்பன்பேட்டை கிராம விவசாயிகளுக்கு, காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜீவக்குமார் கூறுகையில், பூதலூர் தாலுகா செல்லப்பன்பேட்டை கிராமத்தில் விவசாயம் மட்டும் பிரதானமாக உள்ளது.
பெத்தமாதுரான்ஏரி, பகடைக்குடி ஏரி, கல்லணைக்கால்வாய் மூலம்தான் இப்பகுதியில் பாசனம் நடக்கிறது. இதன் பாசன பரப்பு 300 ஏக்கர் ஆகும். இந்தாண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. மேலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் பல பகுதிகளில் சாகுபடி நடைபெறவில்லை. சில இடங்களில் 15 சதவீதம் சாகுபடி செய்தும் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. இதனால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். செல்லப்பன்பேட்டை கிராமத்திலும் இதே நிலை தான் உள்ளது. 75 சதவீதத்துக்கு மேல் சாகுபடி செய்யாத கிராம விவசாயிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத்தொகைையோ அல்லது நிவாரணத்தொகையையோ அரசு வழங்க வேண்டும். விவசாயிகளின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)