மயிலாடுதுறையில் பரபரப்பு: நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.40 லஞ்சம் வாங்கியதை நியாயப்படுத்தினாரா உணவுத்துறை அமைச்சர்? விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!
நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு கழிவறை வசதி இல்லாததால் தான் ரூ.40 வாங்கினார்கள்!" - த.வெ.க உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணனின் விளக்கம் விவசாயிகளிடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

மயிலாடுதுறை: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் வாங்கப்பட்டது உண்மைதான் எனப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடு, அதற்கான காரணத்தைக் கூறி நியாயப்படுத்தும் வகையில் பேசியிருப்பது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரின் திடீர் கள ஆய்வு
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, த.வெ.க தலைவர் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், துறை வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுத் தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருப்புங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு (DPC) உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் நேற்று நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளைப் பார்வையிட்ட அமைச்சர், நெல்லின் ஈரப்பதம் மற்றும் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள், நெல் பாதுகாப்பு முறைகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து விவசாயிகளிடமும், பணியாளர்களிடமும் கலந்துரையாடினார்.
ரூபாய் 40 லஞ்சம்: உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கடரமணனிடம், "தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைக்கு தலா 40 ரூபாய் கட்டாய வசூலாகப் பெறப்பட்டு வருகிறது என்ற தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே, இதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், யாரும் எதிர்பாராத விதமாகப் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அவர் பேசுகையில், "அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தங்குமிடம், முறையான கழிவறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அப்படிப்பட்ட சவாலான சூழலில், தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் வாங்கி அதனை நிறைவேற்றியுள்ளனர். ஆனால், இனிவரும் காலங்களில் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்கும். அதனை தொடர்ந்து விவசாயிகளிடம் அரசு இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காதவாறு நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
விவசாயிகள் கேள்வி - இது ஊழலை நியாயப்படுத்துவதா?
விவசாயிகளிடம் லஞ்சம் பெறப்பட்டதை அமைச்சர் ஒப்புக்கொண்ட விதம், அங்கு கூடியிருந்த விவசாய அமைப்புகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போதே இந்த 40 ரூபாய் கட்டாய வசூல் பெரும் புகாராக வெடித்தது. தற்போது த.வெ.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், நெல் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் கூடுதலாக பெற்றதை நியாயப்படுத்தி, ஊழலுக்கு ஆதரவாக பேசுயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 பெற்றது உண்மையென்றால் அதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர் ஊழலை நியப்படுத்தும் செயல் ஏற்புடையது அல்ல என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அமைச்சர் தட்டிக் கேட்காமல், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற காரணத்தைக் கூறி லஞ்சத்தை நியாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்துப் பேசிய உள்ளூர் விவசாயி ஒருவர், "அடிப்படை வசதிகள் இல்லை என்றால் அதற்காக அரசிடம் தான் ஊழியர்கள் கோரிக்கை வைக்க வேண்டும். அதை விடுத்து, வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு நெல் விளைவித்து வரும் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து மூட்டைக்கு 40 ரூபாய் வாங்குவது அப்பட்டமான ஊழல் மற்றும் பகல் கொள்ளை ஆகும். தவறு செய்த ஊழியர்கள் மீது தீர்க்கமான விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவுத்துறை அமைச்சரே, அதற்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது சட்டத்தின் ஆட்சியா அல்லது ஊழலுக்கான அங்கீகாரமா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மழைக்காலப் பாதுகாப்புக்கு புதிய அறிவிப்பு
இப்பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மழைக்காலங்களில் நெல் வீணாவதைத் தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். "மழைக்காலங்களில் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்யக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு, தனித்தனியாகப் பிரத்யேகத் தார்பாய்கள் (Tarpaulins) வழங்கி, அவர்களின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகாமல் முழுமையாகப் பாதுகாக்க இந்த அரசு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யும்" என்றும் அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார். இருப்பினும், நெல் கொள்முதல் நிலைய ஊழலை அமைச்சர் கையாண்ட விதம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்திலும், டெல்டா மாவட்ட விவசாயிகளிடையேயும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























