![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
100 ஏக்கர் நிலம்.. 25 ஆண்டுகள் உழைப்பு.. கட்டாந்தரையை காடாக்கிய தனி ஒருவர்!
விழுப்புரம்: 100 ஏக்கர் நிலம்; 25 ஆண்டுகள் உழைப்பு தனி மனிதரின் முயற்சியால் உருவான செழிப்பான காடு
![100 ஏக்கர் நிலம்.. 25 ஆண்டுகள் உழைப்பு.. கட்டாந்தரையை காடாக்கிய தனி ஒருவர்! In Boothore village the dry tropical forest created by one of the 100 acres of land 100 ஏக்கர் நிலம்.. 25 ஆண்டுகள் உழைப்பு.. கட்டாந்தரையை காடாக்கிய தனி ஒருவர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/12/29cd18b7a346e6ee6787477b4e4ab782_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல காடு. மரங்கள், செடிக் கொடிகள் நிறைந்த இந்த காட்டில் பறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் அமையப்பெற்ற இந்த பகுதி, ஆரண்யா காடு மற்றும் சரணாலயம் என்று அழைக்கப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மரங்கள் வளர்ப்பது, காடுகளைப் பராமரிப்பது என இயற்கை மீது கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்து வந்தார்.
இயற்கையைப் பராமரிப்பதில் சரவணனின் அளவு கடந்த பற்றை உணர்ந்த ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் கட்டாந்தரையாக மரங்களற்று இருந்த 100 ஏக்கர் நிலத்தைக் காடுகளாக உருவாக்க சரவணனிடம் ஒப்படைத்தனர். பிறகு அந்த இடத்தில் உலர் வெப்ப மண்டல காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நிலத்தில் மண் வளத்தைப் பெருக்க, மழைநீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு சம உயர வரப்புகள் அமைத்து மழைநீர் வெளியேறாமல், பூமிக்கடியில் செல்லும்படி செய்தார். இதனால் அந்த பகுதியில் நீர் வளமும், மண்ணின் வளமும் பெருகியது.
இதனையடுத்து அப்பகுதி கிராம இளைஞர்கள் உதவியுடன் 100 ஏக்கர் நிலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டார். இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இவரின் கடின முயற்சியால், தற்போது மரம், செடி, கொடிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்ந்து, ஆரண்யா வனம் பசுமையாகக் காணப்படுகிறது. ரவணன் உருவாக்கிய இந்த ஆரண்யா வனத்தில், சேராங்கொட்டை, சப்போட்டாவில் தாய் மரமான கணுபலா, பெருங்காட்டுக்கொடி, மலைப்பூவரசு, செம்மரம், தேக்கு, கருங்காலி, வேங்கை, துரிஞ்சை உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட மர வகைகள் இங்கே இருக்கின்றன.
மேலும் மாங்குயில், மயில், பச்சைப் புறா, கொண்டலாத்தி, அமட்ட கத்தி உள்ளிட்ட 240 பறவை வகைகளும் காணப்படுகின்றன. இதையடுத்து முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, மரநாய், நரி, தேவாங்கு, உடும்பு, எறும்புத்தின்னி, புனுகு பூனை, நட்சத்திர ஆமை உள்ளிட்ட பல வன விலங்குகள் மற்றும் 20 வகையான பாம்பு இனங்களும் ஆரண்யா வனத்தில் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆரம்பக் காலத்திலிருந்து தன்னந்தனியாக ஆரண்யா காட்டை உருவாக்கிய சரவணன், தனது குடும்பத்துடன் இந்த காட்டிலேயே வசித்து வருகிறார்.
இந்த பூமி யாருடையது? என்ற கேள்வியை ஆரண்யா வனத்திற்குச் செல்லும் ஒவ்வொருவரிடம் கேட்கிறார் சரவணன். ஆனால், அனைவரும் இந்த பூமி மனிதர்களுக்கானது, ஜீவ ராசிகளுக்கானது என்று பதிலளிப்பதாகக் கூறுகிறார். இந்த பூமி வருங்கால சந்ததியருக்கானது, வெறும் கல்வி மற்றும் செல்வத்தால் நம்முடைய பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் வாழ வைத்திட முடியாது, அது உண்மையும் இல்லை. இனி வரும் காலத்திற்கு இந்த பூமியை அவர்களிடத்தில் இயற்கை வளங்களுடன் அழகாகக் கொடுக்க வேண்டும். அதை நோக்கியே நம்முடைய பயணம் இருக்க வேண்டும், என்றார் அவர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)