மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ரூ.30 கோடி கடன்: வேளாண் கட்டமைப்பை மேம்படுத்த விண்ணப்பிக்கலாம்! | கடைசி வாய்ப்பு?
மயிலாடுதுறையில் வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30 கோடி கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி மற்றும் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், மத்திய அரசு உருவாக்கியுள்ள வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின்கீழ், விவசாய தொழில்முனைவோர் மற்றும் விவசாய குழுக்களுக்கான சிறப்பான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது.
வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதிலும், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதிலும் வலுவான உள்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைப்பது, விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வது, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது எனப் பல வகைகளில் இது துணைபுரிகிறது. இந்த நோக்கத்தை அடைவதற்காகவே மத்திய அரசு வேளாண் உள்கட்டமைப்பு நிதியை (Agricultural Infrastructure Fund) உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகளும், விவசாயம் சார்ந்த தொழில்முனைவோரும் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான நிதி உதவிகளைப் பெற முடியும்.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இத்திட்டத்தின்கீழ் 30 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வில் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு, அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், பயனாளிகள் தங்கள் கடனுக்கு 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியத்தைப் பெற முடியும். மேலும், அரசின் கடன் உத்தரவாதமும் வழங்கப்படுவதால், கடன் பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், திட்ட மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே பயனாளியின் பங்களிப்பாக இருக்கும். இது விவசாயிகளுக்கு ஏற்படும் நிதிச்சுமையைக் கணிசமாகக் குறைக்கிறது. மேலும், வேறு மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களில் மானியம் பெறும் பயனாளிகளும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். இது பல அடுக்கு பயன்களைப் பெற வழிவகுக்கிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
இத்திட்டத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில் பின்வருவன அடங்கும்
- விவசாய தொழில்முனைவோர்
- விவசாய குழுக்கள்
- சுய உதவி குழுக்கள்
- கூட்டு பொறுப்பு குழுக்கள்
- உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs)
- தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள்
- கூட்டுறவு விற்பனை சங்கங்கள்
- பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் கூட்டமைப்புகள்
- புதிய நிறுவனங்கள்
- வணிக நிறுவனங்கள்
எதற்காக கடன் பெறலாம்?
இந்த நிதியுதவியானது பல்வேறு வகையான விவசாய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
அவற்றுள் சில
- மின்னணு வணிக மையங்கள்: விளைபொருட்களை ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்தவும், அதிக லாபம் ஈட்டவும் உதவும்.
- சேமிப்பு கிடங்குகள்: விளைபொருட்களைப் பாதுகாப்பாக சேமித்து வைத்து, தேவைப்படும்போது விற்பனை செய்ய உதவும்.
- குளிர்பதன கிடங்குகள்: அழுகக்கூடிய விளைபொருட்களை நீண்ட காலம் பாதுகாத்து, சந்தை மதிப்பை உயர்த்தும்.
- சிப்பம் கட்டும் கூடங்கள்: விளைபொருட்களை தரம் பிரித்து, சிப்பம் கட்டி சந்தைக்கு அனுப்ப உதவும்.
- தரம் பிரிக்கும் இயந்திரங்கள்: விளைபொருட்களை தரவாரியாகப் பிரிக்க உதவும்.
- மெழுகு பூசும் மையங்கள்: பழங்கள் போன்ற விளைபொருட்களின் ஆயுளை நீட்டிக்க உதவும்.
- பண்ணைக்கழிவு மேலாண்மை சார்ந்த உள்கட்டமைப்புகள்: விவசாய கழிவுகளை மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்க அல்லது எரிசக்தி உற்பத்தி செய்ய உதவும்.
- மண்புழு உரம் தயாரித்தல் அலகுகள்: இயற்கை உர உற்பத்தியை ஊக்குவிக்கும்.
- சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்தல்: பண்ணை தேவைகளுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்து, செலவுகளைக் குறைக்கும்.
இவை அனைத்தும் விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதோடு, வேளாண் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கும்.
கூடுதல் தகவல்களுக்கு
இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ள, பின்வரும் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்:
- கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்
- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
- நபார்டு வங்கி
- வேளாண்மை துறை அலுவலர்கள்
- தோட்டக்கலைத்துறை அலுவலர்கள்
- வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள்
- மாவட்ட தொழில் மைய அலுவலர்கள்
- வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள்
- மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்கள்
மேலும், https://agriinfra.dac.gov.in/ என்ற இணையதள முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தங்களுக்கு விருப்பமான வங்கி கிளையில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.





















